செய்திகள்

குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சி 15 நாட்களில் கவிழும்: சதானந்தகவுடா ஆரூடம்

Published On 2018-08-29 02:21 GMT   |   Update On 2018-08-29 02:21 GMT
குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சி இன்னும் 15 நாட்களில் கவிழும் என்று மத்திய மந்திரி சதானந்தகவுடா ஆரூடம் தெரிவித்துள்ளார். #sadanandagowda #kumaraswamy
மங்களூரு :

மத்திய மந்திரி சதானந்த கவுடா மங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி மீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர். இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி கிடையாது. அவர்களாகவே உருவாக்கிய ஆட்சி. மக்கள் பா.ஜனதாவை ஆதரித்தனர். ஆனால் எதிர்பாராதவிதமாக மக்கள் விரும்பாத கூட்டணி ஆட்சி அமைந்துவிட்டது. காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் குறுக்கு வழியில் ஆட்சியை பிடித்துள்ளனர். காங்கிரஸ் கட்சி மேலிடம் கூறியதால், அதற்கு அடிபணிந்து சித்தராமையா, கூட்டணி ஆட்சிக்கு ஒப்புக் கொண்டார்.

ஆனால் குமாரசாமி முதல்மந்திரியாக இருப்பதை சித்தராமையா விரும்பவில்லை. கூட்டணி ஆட்சியை சித்தராமையா கவிழ்க்க முயன்றது அனைவருக்கும் தெரியும். தற்போது சித்தராமையா, தான் மீண்டும் முதல்மந்திரி ஆவேன் என்று கூறியுள்ளதன் மூலம் அது நிரூபணமாகி உள்ளது. இன்னும் ஒரு மாதம் அல்லது 15 நாட்களில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சி கவிழ்ந்துவிடும். கூட்டணி ஆட்சியை யாரும் கவிழ்க்க வேண்டாம். அது தானாகவே கவிழ்ந்துவிடும்.

ஆனால் காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் பா.ஜனதா மீது தேவையில்லாத குற்றச்சாட்டை கூறி வருகிறார்கள். மீண்டும் முதல்மந்திரி ஆவேன் என்று சித்தராமையா கூறி வருகிறார். சித்தராமையாவின் பகல் கனவு பலிக்காது. தற்போது உள்ள காங்கிரஸ் தலைவர்கள் அவருடைய தலைமையில் ஆட்சியை அமைக்க தயாராக இல்லை. அவருக்கு ஆதரவும் அளிக்கப்போவது இல்லை.



ரபேல் விமான கொள்முதல் விஷயத்தில் எந்த விசாரணையையும் எதிர்கொள்ள தயாராக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஆனால் காங்கிரஸ் கட்சியினர் இந்த விஷயத்தில் தேவையில்லாமல் அரசியல் செய்கிறார்கள். ராகுல்காந்திக்கு அரசியல் அனுபவம் போதாது. அவர் எந்தவித ஆதாரமும் இன்றி மோடி மீது குற்றம்சாட்டி வருகிறார். இது சரியல்ல.

கர்நாடகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக குடகு, தட்சிண கன்னடா மாவட்டத்தில் பல ஆயிரம் ஏக்கரில் பாக்கு மரங்கள், காபி தோட்டங்கள், மிளகு செடிகள் நாசமாகி உள்ளன. அந்த தோட்டங்களின் உரிமையாளர்கள் கூலி வேலைக்கு செல்லும் அவலநிலை உள்ளது. இதற்கு முன்பு நான் முதல்மந்திரியாக இருந்தபோது, பாக்கு மரங்களை நோய் தாக்கியதால் ஏராளமான விவசாயிகள் நஷ்டமடைந்தனர். அவர்களுக்கு நான் தக்க நிவாரணம் வழங்கினேன்.

அதேபோல, தற்போது உள்ள அரசும், இந்த விவசாயிகளுக்கு தக்க நிவாரணம் வழங்க வேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க கூடுதல் நிவாரணம் வேண்டும் என்று மாநில அரசு கோரிக்கை விடுத்தால், அதனை நிறைவேற்ற மத்திய அரசு தயாராக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். #sadanandagowda #kumaraswamy
Tags:    

Similar News