செய்திகள்
வெள்ள பாதிப்புகளை பார்வையிட கேரளா வந்தடைந்தார் பிரதமர் மோடி
கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று கேரளா மாநிலம் திருவனந்தபுரம் வந்தடைந்தார். #KeralaRains #KeralaFlood #StandWithKerala #PMModi
திருவனந்தபுரம் :
கேரளா மாநிலத்தில் கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகளும், ஏரிகளும் நிரம்பி வழிகின்றன.
மொத்தம் உள்ள 39 அணைகளில் 33 அணைகள் திறக்கப்பட்டுள்ளது. அணைகளில் இருந்து வெளியேறும் தண்ணீர், தொடர் மழையால் கேரளாவின் அனைத்து மாவட்டங்களும் வெள்ளத்தில் தத்தளிக்கிறது.
மழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் கேரளாவில் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கேரளாவில் ஏற்பட்டுள்ள இந்த இயற்கை சீற்றத்தில் இருந்து மீட்க, மத்திய அரசு உட்பட பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.
மழை பாதிப்பால் இதுவரை 324 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட பிரதமர் மோடி இன்று கேரளா வந்தடைந்தார். டெல்லியில் நடைபெற்ற மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற பின்னர் கேரளா புறப்பட்ட அவர் திருவனந்தபுரம் விமான நிலையம் வந்தடைந்தார்.
விமான நிலையத்தில் பிரதமர் மோடியை கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், கவர்னர் சதாசிவம், மத்திய மந்திரி அல்போன்ஸ் ஆகியோர் வரவேற்றனர்.
கனமழையினால் ஏற்பட்ட சேதங்களை பிரதமர் மோடி நாளை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிடுகிறார். அதைத்தொடர்ந்து, வெள்ள பாதிப்புகள் குறித்து பினராயி விஜயனிடம் மோடி ஆலோசனை நடத்த உள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது. #KeralaRains #KeralaFlood #StandWithKerala #PMModi