செய்திகள்

யானைகள் வழித்தட விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல்

Published On 2018-08-14 21:40 GMT   |   Update On 2018-08-14 21:40 GMT
நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தில் இடையூறாக அமைந்த 27 தனியார் விடுதிகளுக்கு ‘சீல்’ வைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, வழக்குதாரர் தரப்பில் ஒரு ‘கேவியட்’ மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. #NilgirisElephant #SupremeCourt
புதுடெல்லி:

தமிழ்நாட்டில், நீலகிரி மாவட்டம், முதுமலை சரணாலயத்தை ஒட்டியுள்ள கிராமத்தில் யானைகளின் வழித்தடங்களை ஆக்கிரமித்து விடுதி மற்றும் ஓட்டல்கள் கட்டுவதற்கு சென்னை ஐகோர்ட்டு கடந்த 2011-ம் ஆண்டு தடை விதித்தது.

அந்த தடையை எதிர்த்து விடுதி உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் என 50-க்கும் மேற்பட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி மதன் பி.லோகுர் தலைமையிலான அமர்வு கடந்த 9-ந் தேதியன்று விசாரித்தது.



அப்போது, “யானைகள் வழித்தடத்தில் விதிமுறைகளை மீறி 39 வணிக நிறுவனங்கள் இருப்பதாக கலெக்டர் கூறி இருக்கிறார். இவற்றில் 27 விடுதிகள் சார்பாக யாரும் ஆஜர் ஆகவில்லை. எனவே அவர்கள் கலெக்டரின் அறிக்கையை ஒத்துக்கொள்வதாக ஆகிறது. அந்த 27 விடுதிகளும் 48 மணி நேரத்தில் மூடி ‘சீல்‘ வைக்கப்பட வேண்டும். மீதம் உள்ள 12 விடுதிகளும் தங்களுக்கு அனுமதி உள்ளதா என்பதை 48 மணி நேரத்தில் தெரிவிக்க வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவை பிறப்பித்தனர்.

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் மூல வழக்குதாரரும், வக்கீலுமான யானை ராஜேந்திரன் நேற்று ‘கேவியட்’ மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் அவர், “யானைகள் வழித்தட விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு கடந்த 9-ந் தேதி உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து யாரேனும் மேல்முறையீட்டு வழக்கு போட்டால், அந்த வழக்கில் என்னையும் ஒரு தரப்பாக ஏற்றுக்கொண்டு என்னுடைய தரப்பு வாதத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது” என கூறி உள்ளார்.  #NilgirisElephant #SupremeCourt
Tags:    

Similar News