செய்திகள்

பீகாரில் துணிகரம் - ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சி பிரமுகர் சுட்டுக் கொலை

Published On 2018-08-13 20:44 GMT   |   Update On 2018-08-13 20:44 GMT
பீகாரில் ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சியின் பிரமுகரான மனீஷ் சஹானி அவரது அலுவலக வளாகத்தில் சுட்டுக் கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாட்னா:

பீகார் மாநிலத்தின் வைஷாலி மாவட்டத்தை சேர்ந்தவர் ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சி பிரமுகர் மனீஷ் சஹானி. இவர் நேற்று ஜந்தாஹா பகுதியில் உள்ள தனது அலுவலகத்தில் கட்சி பணிகளை கவனித்துக் கொண்டிருந்தார்.  

இந்நிலையில், அலுவலகத்தின் முன் நின்றிருந்த சஹானி மீது அங்கு பைக்கில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.

இந்த தாக்குதலில் சஹானி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து, குற்றவாளிகளை கைதுசெய்ய கோரி அவரது ஆதரவாளர்கள் உள்ளூர் காவல் நிலையத்தின் முன்பு போராட்டம் நடத்தினர்.

இதுதொடர்பாக முதல் மந்திரி நிதிஷ்குமார் உரிய விசாரணை நடத்த வேண்டும் என மத்திய மந்திரியும், ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சி தலைவருமான உபேந்திரா குஷ்வா வலியுறுத்தியுள்ளார்.

ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சி தலைவர் அவரது அலுவலக வளாகத்தில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டது அப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News