செய்திகள்

கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 69 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு

Published On 2018-07-27 03:22 GMT   |   Update On 2018-07-27 03:22 GMT
கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 69,557 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. #KRSDam #KabiniDam #Cauvery
மைசூரு:

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதுபோல் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் மண்டியாவில் உள்ள கே.ஆர்.எஸ். (கிருஷ்ணராஜசாகர்), மைசூருவில் உள்ள கபினி அணைகளுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. இதன் காரணமாக இரு அணைகளும் கடந்த 19-ந்தேதி இரவு முழுகொள்ளளவை எட்டின. இதைதொடர்ந்து இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு ஒரு லட்சம் கனஅடிக்கு மேல் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது மிதமான மழையும், சில சமயங்களில் கனமழையும் பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு வரும் நீரின் அளவை பொறுத்து, அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.



இந்த நிலையில் நேற்று காலை நிலவரப்படி கே.ஆர்.எஸ். அணையின் (முழுகொள்ளளவு-124.80 அடி) நீர்மட்டம் 123.33 அடியை எட்டியது. அணைக்கு வினாடிக்கு 49,893 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 42,524 கனஅடி வீதம் நீர் திறந்துவிடப்பட்டது.

அதுபோல் கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் நேற்று 2,282.87 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 28,022 கனஅடி வீதம் நீர்வரத்து இருந்தது. அதேவேளையில் அணையில் இருந்து வினாடிக்கு 27,033 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் இரு அணைகளில் இருந்தும் நேற்று தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 69,557 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரு அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு திறந்துவிடப்படும் நீரின் அளவு வினாடிக்கு 68,277 கனஅடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.  #KRSDam #KabiniDam #Cauvery
Tags:    

Similar News