செய்திகள்

இந்த ஆண்டு இறுதியிலேயே பாராளுமன்ற தேர்தல்: மாயாவதி சொல்கிறார்

Published On 2018-07-16 10:30 GMT   |   Update On 2018-07-16 10:30 GMT
இந்த ஆண்டு இறுதியிலேயே பாராளுமன்ற தேர்தல் வர வாய்ப்பு இருக்கிறது என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். #mayawati #parliamentelection

லக்னோ:

பிரதமர் நரேந்திரமோடி உத்தரபிரதேச மாநிலத்தில் பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் செய்து கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசினார்.

அப்போது காங்கிரசையும், மாநில எதிர்க்கட்சிகளையும் கடுமையாக விமர்சித்தார். இதுதொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கருத்து வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது:-

உத்தரபிரதேச சுற்றுப் பயணத்தில் பிரதமர் மோடியின் பேச்சுக்களை பார்க்கும்போது விரைவிலேயே பாராளுமன்றத்துக்கு தேர்தல் வரும் என்பது தெளிவாகிறது.

2019-ல் தேர்தல் நடக்கும் என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த ஆண்டு இறுதியிலேயே தேர்தல் நடத்துவற்கு பாரதீயஜனதா கட்சி தயாராகி விட்டது.

மத்தியபிரதேசம், சத்திஸ்கார், ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலோடு சேர்ந்து பாராளு மன்றத்துக்கும் தேர்தல் வரும். இதனால் தான் பிரதமர் வளர்ச்சி திட்டங்களை பற்றி கூறாமல் ஜாதி, மத ரீதியாக பேசி வருகிறார்.

முத்தலாக், இந்து முஸ்லிம் விவகாரம் போன்றவற்றை கையில் எடுத்து தவறான தகவல்களை பரப்புகிறார். மதரீதியாக அரசியல் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்.

மத்திய அரசு எல்லா வகையிலும் தோல்வியை கண்டுள்ளது. ஆட்சியின் சாதனைகளை வைத்து அவர்களால் வெற்றிபெற முடியாது என்பதால் ஜாதி மோதலையும், மத மோதலையும் உருவாக்கி அதன்மூலம் மோசமான அரசியலை செய்வதற்கு பிரதமர் தயாராகி விட்டார்.

இவ்வாறு மாயாவதி கூறினார். #mayawati #parliamentelection

Tags:    

Similar News