செய்திகள்

ப.சிதம்பரத்திடம் சிபிஐ அதிகாரிகள் நான்கு மணி நேரம் நடத்திய விசாரணை நிறைவு

Published On 2018-06-06 12:21 GMT   |   Update On 2018-06-06 12:21 GMT
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரத்திடம் சிபிஐ அதிகாரிகள் இன்று நடத்திய நான்கு மணி நேர விசாரணை நிறைவடைந்தது. #INXMediaCase #PChidambaram
புதுடெல்லி:

மத்திய நிதி மந்திரியாக ப.சிதம்பரம் இருந்த போது விதிமுறைகளை மீறி ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு ரூ.350 கோடி அந்நிய முதலீடு பெறுவதற்கு உதவி செய்ததாக சி.பி.ஐ. குற்றம் சாட்டி இருந்தது. இந்த விவகாரத்தில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் ஆதாயம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமினில் உள்ளார்.

இந்நிலையில், இந்த வழக்கில் ப.சிதம்பரம் ஆஜராகி விளக்கமளிக்க சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது. இந்த வழக்கில் அவரை ஜூலை 3-ந்தேதி வரை கைது செய்ய தடை விதித்தும், இடைக்கால ஜாமீன் வழங்கியும் டெல்லி ஐகோர்ட்டு சமீபத்தில் உத்தரவிட்டு இருந்தது.

இந்த நிலையில் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக ப.சிதம்பரம் இன்று டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகம் முன்பு முதல் முறையாக ஆஜரானார். சி.பி.ஐ. அதிகாரிகள் அவரிடம் நான்கு மணி நேரம் விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்த பின்னர் இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது, “சிபிஐ-யின் முதல் தகவல் அறிக்கையில் என் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை. வெளிநாட்டு நிதிமுதலீடு பிரிவு கோப்புகள் தொடர்பாக கேள்விகளும் பதில்களும் இருந்தது” என தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவன இயக்குனர் இந்திராணி முகர்ஜி, செய்தி இயக்குனர் பீட்டர் முகர்ஜி ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இருவரும் தங்களது மகள் ஷீனா போராவை கொன்ற வழக்கில் தற்போது சிறையில் உள்ளனர். 
Tags:    

Similar News