செய்திகள்

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு - 270 அடி உயர பாறையில் இருந்து குதித்து காதல் ஜோடி தற்கொலை

Published On 2018-05-31 04:58 GMT   |   Update On 2018-05-31 04:58 GMT
கேரள மாநிலம் கண்ணூர் அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் 270 அடி உயர பாறை உச்சியில் இருந்து குதித்து காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டனர்.
கொழிஞ்சாம்பாறை:

கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ள பாப்பினஞ்சேரியை சேர்ந்தவர் கமல் குமார் (24). இவர் அதே பகுதியை சேர்ந்த அஸ்வதி (20) என்ற பெண்ணை கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தார்.

இந்த விவகாரம் இரு வீட்டு பெற்றோருக்கும் தெரிய வந்தது. அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் வெறுப்படைந்த காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறியது.

அவர்கள் பாப்பினஞ்சேரி அருகே உள்ள சுற்றுலா தலமான செசிபாறைக்கு சென்றனர். காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மன வேதனையில் இருந்த கமல் குமாரும், அஸ்வதியும் அங்கிருந்த 270 அடி உயரபாறையில் இருந்து குதித்தனர்.

இதில் இருவரும் பரிதாபமாக இறந்தனர். இந்த நிலையில் கமல்குமார், அஸ்வதியை காணாதது குறித்து அவர்களது பெற்றோர் பாப்பினஞ்சேரி போலீசில் புகார் கொடுத்து இருந்தனர்.

போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் காதல் ஜோடி பாறையில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. கமல் குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் பாறை அருகே கிடந்தது.

அதனை போலீசார் கைப்பற்றினார்கள். தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News