செய்திகள்

ஷேக் ஹசினாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் - மேற்கு வங்காளம் பல்கலைக்கழகம் வழங்கியது

Published On 2018-05-26 09:36 GMT   |   Update On 2018-05-26 09:36 GMT
வங்காளதேசம் பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள காஸி நஸ்ருல் பல்கலைக்கழகம் இன்று டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது. #SheikhHasina #HonoraryDLittKNU
கொல்கத்தா:

இருநாள் அரசுமுறை பயணமாக வங்காளதேசம் பிரதமர் ஷேக் ஹசினா இந்தியா வந்துள்ளார். மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள சாந்தி நிகேதன் பகுதியில் விஸ்வ பாரதி பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடியுடன் ‘பங்களா தேஷ் பவன்’ கட்டிடத்தை ஷேக் ஹசினா திறந்து வைத்தார்.

இந்நிலையில், மேற்கு வங்காளம் மாநிலம், பஸ்ச்சிம் பர்தமன் மாவட்டம், அசனால் நகரில் உள்ள காஸி நஸ்ருல் பல்கலைக்கழகம் இன்று ஷேக் ஹசினாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது.

பட்டத்தை பெற்றுகொண்டு ஏற்புரை ஆற்றிய ஷேக் ஹசினா, வங்காளதேசம் நாட்டின் தேசிய கவியான காஸி நஸ்ருல் பெயரால் அமைந்துள்ள இந்த பல்கலைக்கழகம் அளிக்கும் பட்டத்தை பெற்றதில் பெருமை அடைகிறேன். இந்த பல்கலைக்கழகத்தை உருவாக்கிய முதல் மந்திரி மம்தா பானர்ஜிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இது எனக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்தமாக வங்காளதேசம் நாட்டில் வாழும் அனைவருக்குமான பெருமிதம் என்று குறிப்பிட்டார்.

இவ்விழாவில் அவர் பேசியதாவது:-

பாகிஸ்தானிடம் இருந்து வங்காளதேசம் விடுதலை பெறுவதற்காக கடந்த 1971-ம் ஆண்டு இந்தியா நடத்திய போரில் பல இந்திய வீரர்கள் மகத்தான உயிர் தியாகம் செய்துள்ளனர். அவர்களை எல்லாம் எங்கள் நாட்டு மக்கள் ஒருநாளும் மறக்க மாட்டார்கள்.



குறிப்பாக, எனது தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான் படுகொலை செய்யப்பட்ட பிறகு எனக்கும், என் தங்கை ஷேக் ரெஹானா உட்பட எங்கள் குடும்பத்தை சேர்ந்த 18 உறுப்பினர்களுக்கும் அரசியல் தஞ்சம் அளித்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, இந்திய அரசு மற்றும் இந்திய மக்கள் அளித்த ஆதரவை எங்களால் ஒருபோதும் மறக்க முடியாது.

இன்று புவியியல் அமைப்பின்படி, வங்காளதேசமும், மேற்கு வங்காளம் மாநிலமும் பிரிந்து இருக்கலாம். ஆனால், ரவீந்திரநாத் தாகூர் மற்றும் காஸி நஸ்ருல் என்னும் மிகச்சிறந்த கவிஞர்களை யாராலும் இந்த இருநாட்டு மக்களின் இதயங்களில் இருந்து பிரிக்கவே முடியாது.

இவ்வாறு அவர் பேசினார். #SheikhHasina #HonoraryDLittKNU
Tags:    

Similar News