செய்திகள்

அரசு பங்களாவை காலி செய்ய இரண்டாண்டுகள் அவகாசம் கேட்கிறார் அகிலேஷ் யாதவ்

Published On 2018-05-21 15:15 GMT   |   Update On 2018-05-21 15:15 GMT
உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் முன்னர் தனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அரசு பங்களாவை காலி செய்வதற்கு இரண்டாண்டுகள் கால அவகாசம் தருமாறு கேட்டுள்ளார். #AkhileshYadav
லக்னோ:

உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வர்களுக்கு நிரந்தர குடியிருப்பு, அரசு சம்பளத்தில் உதவியாளர்கள், தொலைபேசி இணைப்பு உள்ளிட்ட சகல வசதிகளை அளிக்கும் சட்ட மசோதா சட்டசபையில் கடந்த சமாஜ்வாடி ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு விசாரித்த நீதிபதிகள், “முன்னாள் முதல்வர்களுக்கு அரசு பங்களா உள்ளிட்ட வசதிகளை அனுபவிக்க உரிமை கிடையாது. முன்னாள் எம்.எல்.ஏ என்ற அந்தஸ்தில்தான் அவர்கள் இருப்பர். ஓய்வூதியம் உள்ளிட்ட படிகள் வழங்கும் போது, நிரந்தர குடியிருப்பு வழங்குவது தவறானது” என தெரிவித்தனர். இதனை அடுத்து, அந்த சட்டத்தை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

இதனை அடுத்து, 15 நாட்களில் முன்னாள் முதல்வர்கள் அரசு வீடுகளை காலி செய்ய வேண்டும் என மாநில அரசு நோட்டீஸ் அனுப்பியது. மாயாவதி தற்போது வசிக்கும் வீட்டை காலி செய்துவிட்டு 15 கோடி மதிப்பில் உள்ள வீட்டில் குடியேற உள்ளதாக தெரிவித்திருந்த நிலையில், மற்றொரு முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தனது வீட்டை காலி செய்ய 2 ஆண்டுகள் கால அவகாசம் கேட்டுள்ளார்.

இசட் பிளஸ் பாதுகாப்பு பிரிவில் தான் இருப்பதால் தற்போது லக்னோ நகரில் பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட வீடு கிடைப்பது கடினமாக உள்ளது. இதனால், இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வேண்டும் என அகிலேஷ் யாதவ் தரப்பில் மாநில அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News