செய்திகள்

ஐந்து ஆண்டுகள் நிலையான ஆட்சியைக் கொடுப்பேன்- குமாரசாமி

Published On 2018-05-21 10:03 GMT   |   Update On 2018-05-21 10:03 GMT
கர்நாடக மாநிலத்தில் ஐந்து ஆண்டுகள் நிலையான ஆட்சியை கொடுப்பேன் என முதலமைச்சராக பதவியேற்க உள்ள குமாரசாமி தெரிவித்தார். #KarnatakaCM #Kumaraswamy
ஹசன்:

கர்நாடகத்தில் எடியூரப்பா ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து ஜே.டி.எஸ். தலைவர் குமாரசாமி நாளை மறுநாள் முதல்-மந்திரியாக பதவி ஏற்க இருக்கிறார். 38 இடங்களில் வெற்றி பெற்ற ஜே.டி.எஸ். கட்சிக்கு 78 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது. மெஜாரிட்டிக்கு 112 எம்.எல்.ஏ.க்கள் தேவை. அதையும் தாண்டி இந்த  கூட்டணிக்கு 116 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு மந்திரி சபைக்கு உள்ளது.

ஆட்சியமைக்கும் பணியில் தீவிரமாக உள்ள குமாரசாமி இன்று ஹசன் பகுதியில் உள்ள லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த குமாரசாமி, கர்நாடக மாநிலத்தில் ஐந்து ஆண்டுகள் நிலையான ஆட்சி கொடுப்போம் என்றார்.

‘முதலமைச்சர் பதவி என்பது இந்த நேரத்தில் மிகவும் சவாலான பதவி. மற்ற கட்சிகளின் நிலைப்பாட்டையும் உன்னிப்பாக கவனித்து வருகிறேன். நான் ஐந்து ஆண்டுகள் நிலையான ஆட்சியைக் கொடுப்பதை உறுதி செய்யும் வகையில், எங்கள் கூட்டணி கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும்’ என குமாரசாமி தெரிவித்தார்.

முதலமைச்சர் பதவியை ஜேடிஎஸ் கட்சியும் காங்கிரசும் பகிர்ந்து கொள்ளலாம் என்றும், ஒவ்வொரு கட்சிக்கும் 30 மாதங்கள் முதலமைச்சர் பதவி கிடைக்கலாம் என்றும் தகவல்கள் வெளியான நிலையில் குமாரசாமியின் இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. #KarnatakaCMRace #KarnatakaCM #Kumaraswamy
Tags:    

Similar News