செய்திகள்

இஸ்ரோ அனுப்பிய ஜிசாட்-6ஏ உடனான தொடர்பு துண்டிப்பு - சீரமைக்கும் பணிகள் தீவிரம்

Published On 2018-04-01 08:27 GMT   |   Update On 2018-04-01 08:27 GMT
சமீபத்தில் விண்ணில் ஏவப்பட்ட ஜிசாட்-6ஏ செயற்கைக்கோளுடனான தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் அதை சீரமைக்கும் பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் முழுவீச்சில் செயலாற்றி வருகின்றனர். #GSAT6A #ISRO
பெங்களூரு:

தொலைத்தொடர்புக்கு உதவும் ஜிசாட்-6ஏ ரக அதிநவீன செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தயாரித்துள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து கடந்த 29-ம் தேதி மாலை 4.56 மணியளவில் ஜி.எஸ்.எல்.வி. எஃப் 08 ராக்கெட் மூலம் இந்த  ஜிசாட்-6ஏ செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்து, புவி சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இதன் ஆயுள்காலம் மற்றும் பணித்திறன் 10 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.



இந்நிலையில், விண்ணில் நிறுத்தப்பட்ட இந்த செயற்கைக்கோளின் இரண்டாம் படிநிலை இயக்கம் கடந்த 31-ம் தேதி (நேற்று) வெற்றிகரமாக நிறைவேறியது.

மூன்றாவது மற்றும் இறுதிகட்ட படிநிலை இன்று தொடங்கவிருந்த நிலையில் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தலைமை கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து ஜிசாட்-6ஏ உடனான தொடர்பு இணைப்பு திடீரென துண்டிக்கப்பட்டுள்ளது.

இழந்த இணைப்பை மீண்டும் ஏற்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் முழுவீச்சில் செயலாற்றி வருகின்றனர். #GSAT6A #ISRO
Tags:    

Similar News