செய்திகள்
விவசாய விளைபொருளுக்கு நியாய விலை நிர்ணயம் - அன்னா ஹசாரே உண்ணாவிரதம் 4-வது நாளை எட்டியது
மத்திய, மாநில அரசுகளில் லோக் பால், லோக் ஆயுக்தா நியமனம், விவசாய விளைபொருளுக்கு நியாய விலை நிர்ணயம் போன்றவற்றை வலியுறுத்தும் அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதம் இன்று 4-வது நாளை எட்டியது. #lokpal #annahazare
புதுடெல்லி:
ஊழலற்ற இந்தியாவை உருவாக்குவதற்காக, ஜன் லோக்பால் அமைப்பை கொண்டு வரக்கோரி காந்தியவாதியும், சமூக ஆர்வலருமான அன்னா ஹசாரே கடந்த 2011-ஆம் ஆண்டு டெல்லியில் மிகப்பெரிய உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார்.
ஜன் லோக்பால் அமைப்பு விரைவில் கொண்டு வரப்படும் என காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு உறுதி அளித்தது. இதனால், அன்னா ஹசாரே தமது போராட்டத்தை கைவிட்டார்.
இந்த நிலையில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜன் லோக்பால் அமைக்கப்படும் என பாராளுமன்ற தேர்தலின்போது பாரதிய ஜனதா கட்சி வாக்குறுதி அளித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ஜன் லோக்பால் அமைப்பை மத்திய அரசு கொண்டுவரவில்லை.
இதனை கண்டித்தும், மத்திய, மாநில அரசுகளில் லோக் பால், லோக் ஆயுக்தா நியமனம், சாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துவது, விவசாய விளைபொருட்களுக்கு நியாயமான குறைந்தபட்ச விலை நிர்ணயம், விவசாய கடன்கள் தள்ளுபடி போன்றவற்றை வலியுறுத்தி டெல்லியில் மகாத்மா காந்தி நினைவிடமான ராஜ்காட் அருகே உள்ள ராம்லீலா மைதானத்தில் கடந்த 23-ம் தேதி தனது காலவரையற்ற தொடர் உண்ணாவிரதத்தை அன்னா ஹசாரே மீண்டும் தொடங்கினார்.
ஏழு ஆண்டுகளுக்கு பின்னர் அவர் தொடங்கிய இந்த உண்ணாவிரதம் இன்று நான்காவது நாளை எட்டியுள்ள நிலையில் அவர் சோர்வாக காணப்படுவதாகவும், உடல் எடையில் 4 கிலோ குறைந்துள்ளதாகவும் ஹசாரேவை கண்காணித்து வரும் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். #tamilnews #lokpal #annahazare