செய்திகள்
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் லாலுவுடன் சத்ருகன் சின்ஹா சந்திப்பு
உடல்நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள பீகார் முன்னாள் முதல்வர் லாலுவை பா.ஜ.க., எம்.பி. சத்ருகன் சின்ஹா இன்று சந்தித்து நலம் விசாரித்தார். #ShatrughanSinha #lalu #ranchihospital
ராஞ்சி:
கால்நடை தீவன ஊழல் வழக்கில் ராஞ்சி நகரின் ஹோட்வார் பகுதியில் உள்ள பிர்சா முன்டா சிறையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23-ம் தேதியில் இருந்து தண்டனை கைதியாக அடைத்து வைக்கப்பட்டுள்ள பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவ் கடந்த மூன்று நாட்களாக மலச்சிக்கல் கோளாறினால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், கடந்த 17-ம் தேதி அவருக்கு தீடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, உயர் சிகிச்சைக்காக ராஞ்சி நகரில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், பீகார் முன்னாள் முதல்வர் லாலுவை பா.ஜ.க., எம்.பி. சத்ருகன் சின்ஹா இன்று சந்தித்து நலம் விசாரித்தார். இதுதொடர்பான தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.
கால்நடை ஊழல் தொடர்பான நான்காவது வழக்கில் இன்று லாலுவுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை சத்ருகன் சின்ஹா சென்று சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #tamilnews #ShatrughanSinha #lalu #ranchihospital