search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சத்ருகன் சின்ஹா"

    • பா.ஜ.க. கட்சி சார்பில் இருமுறை எம்.பி.யாக இருந்துள்ளார்.
    • கடந்த ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு மாறினார்.

    கொல்கத்தா :

    இந்தி நடிகரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.யுமான சத்ருகன் சின்கா, செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறுகையில், 'ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை, சமீபகாலத்தில் நாடு கண்ட மிகவும் வரலாற்றுச் சிறப்புமிக்க யாத்திரை ஆகும். இதை, 1990-ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் அத்வானி நடத்திய ராமர் ரத யாத்திரையுடன் ஒப்பிடலாம்.

    தற்போது மக்கள் மத்தியில் மதிப்புமிக்க தலைவராய் உயர்ந்திருக்கிற ராகுல், இந்த யாத்திரைக்கு பின், எதிர்க்கட்சி முகாமில் பிரதமர் பதவிக்கான போட்டியில் முன்னணியில் உள்ளார். அப்பதவியில் சிறப்பாக செயல்படக்கூடியவராகவும் அவர் தெரிகிறார்' என்றார்.

    ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையை 3 மாதங்களில் சத்ருகன் சின்கா புகழ்ந்து கூறியிருப்பது இது 2-வது முறையாகும்.

    வாஜ்பாய்-அத்வானி காலத்தில் பா.ஜ.க.வின் நட்சத்திர பிரசார பேச்சாளராக விளங்கிய சத்ருகன் சின்கா, அக்கட்சி சார்பில் இருமுறை எம்.பி.யாக இருந்துள்ளார்.

    கடந்த 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்பாக காங்கிரசுக்கு இடம்பெயர்ந்த இவர், கடந்த ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு மாறினார். மேற்கு வங்காளத்தின் அசன்சோல் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி. ஆனார்.

    ராகுல் காந்தியை பாராட்டியுள்ளதால் மீண்டும் காங்கிரசுக்கு திரும்பும் எண்ணம் இருக்கிறதா என்ற கேள்விக்கு, 'இதற்கு என் மவுனமே பதில்' என்று சத்ருகன் சின்கா கூறினார்.

    ×