செய்திகள்
கார் மோதியதில் 9 சிறுவர்கள் பலி - பா.ஜ.க தலைவர் போலீசில் சரண்டர்
பீகாரில் உள்ளூர் பா.ஜ.க தலைவர் மனோஜ் பைதாவின் கார் மோதியதில் 9 சிறுவர்கள் பலியான சம்பவத்தில் அவர் போலீசிடம் இன்று சரணடைந்தார்.
பாட்னா:
பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டம் தர்மபுரா பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் கடந்த 24-ம் தேதி மதியம் வகுப்பு முடிந்து மாணவர்கள் வெளியேறிக் கொண்டிருந்தனர். அப்போது பிரதான சாலையில் இருந்து தாறுமாறாக வந்த கார் ஒன்று பள்ளிக்குள் புகுந்து மோதியதில் பல மாணவர்கள் சிக்கினர்.
அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 9 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 20க்கு மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்தது உள்ளூர் பா.ஜ.க தலைவர் மனோஜ் பைதா என்பது தெரியவந்தது.
விபத்தை ஏற்படுத்திய மனோஜ் பைதா கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, தலைமறைவானார். விபத்தில் அவரும் காயமடைந்ததால் சரணடைந்த அவர், போலீஸ் பாதுகாப்பில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். மனோஜ் பைதாவை பா.ஜ.க ஆறு ஆண்டுகள் கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. #TamilNews