செய்திகள்

கேரளாவில் சிங்கத்துக்கு இரையாக இருந்தவரை உயிருடன் மீட்ட வனவிலங்கு காப்பக பணியாளர்கள்

Published On 2018-02-21 11:19 GMT   |   Update On 2018-02-21 11:19 GMT
கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் இன்று சிங்கத்துக்கு இரையாக இருந்தவரை வனவிலங்கு காப்பக பணியாளர்கள் உயிருடன் மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒட்டப்பல்லம் பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் திடீரென்று காணாமல் போனார். இவரை தேடும் வகையில் உள்ளூர் ஊடகங்களில் சமீபத்தில் விளம்பரங்கள் வெளியாகி இருந்தது.

இந்நிலையில், தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள வனவிலங்கு காப்பகத்துக்கு இன்று காலை வந்த முருகன், அங்கு ஒரு பெண் சிங்கம் அடைத்து வைக்கப்பட்டிருந்த பகுதிக்கு சென்றார். சுமார் 11 மணியளவில் ஐந்தடி உயரமுள்ள தடுப்பு வேலியை தாண்டி குதித்த அவர், முழங்காலிட்டு தவழ்ந்தவாறு சிங்கம் சுற்றித்திரியும் இடத்தை நோக்கி முன்னேறிச் சென்றார்.


இதை கண்ட இதர பார்வையாளர்கள் கூச்சலிட்டனர். அவர்களின் சப்தத்தை கேட்ட வனவிலங்கு காப்பக பாதுகாவலர்களில் சிலர் அங்கிருந்த கிரேசி என்ற 3 வயது பெண் சிங்கத்தின் கவனத்தை திசை திருப்பினர். அதேவேளையில், வேறு சில பாதுகாவலர்கள் முருகனை குண்டுக்கட்டாக தூக்கிவந்து பாதுகாப்பான இடத்தில் சேர்த்தனர்.

இந்த பரபரப்பான நிமிடங்களை பார்வையாளர்களில் சிலர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். பாதுகாவலர்களால் மீட்கப்பட்ட பின்னர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள முருகன் மனநிலை பாதிக்கப்பட்டவர்போல் காணப்படுவதாக அங்கிருந்த சிலர் குறிப்பிட்டனர். #tamilnews
Tags:    

Similar News