செய்திகள்
நவி மும்பை சர்வதேச விமான நிலையத்துக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி
மராட்டிய மாநிலத்தின் நவி மும்பையில் அமையவுள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டியுள்ளார்.
மும்பை:
மராட்டிய மாநிலத்தின் மும்பை மாநகரில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானப் போக்குவரத்து கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்கனவே உள்ள மும்பை விமான நிலையத்தில் விமானங்கள் வந்திறங்குவதற்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. வரும் ஆண்டுகளில் விமான போக்குவரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து, மும்பையில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்காக மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. விமான நிலையம் அமைப்பதற்கு தேவைப்படும் உதவிகளை மத்திய அரசு செய்து வருகிறது.
இரண்டாவது சர்வதேச விமான நிலையம் வடிவமைக்கப்பட்டு அதில் 2019-ம் ஆண்டு இறுதிக்குள் முதல் விமானம் பறக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மராட்டிய மாநில அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மராட்டிய மாநிலத்தின் மும்பையில் இரண்டாவதாக நவி மும்பையில் அமையவுள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டியுள்ளார்.
இந்த அடிக்கல் நாட்டும் விழாவுக்கு வந்த பிரதமர் மோடியை ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் வரவேற்றனர். இந்த விழாவில் விமான போக்குவரத்து துறை மந்திரி கஜபதி ராஜு, சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்கரி உள்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews