செய்திகள்

இஸ்ரேல் பிரதமரை காஷ்மீர் அழைத்து செல்ல முடியுமா? பிரதமருக்கு சிவசேனா கேள்வி

Published On 2018-01-24 07:37 GMT   |   Update On 2018-01-24 07:37 GMT
இஸ்ரேல் பிரதமரை அகமதாபாத்துக்கு அழைத்து சென்றதுபோல காஷ்மீர் மாநிலத்துக்கு அழைத்து செல்ல முடியுமா என பிரதமர் மோடிக்கு சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளார்.
மும்பை:

சிவசேனா கட்சியின் செயற்குழு கூட்டம் மும்பையில் நடைபெற்றது. அதில் பாரதிய ஜனதாவுடன் உள்ள உறவை முறித்துக் கொள்வது என்றும், இனிவரும் தேர்தல்களில் தனித்தே போட்டியிடுவது என்றும் முடிவு செய்தனர். பின்னர் சிவசேனா தலைவர் உத்தவ்தாக்கரே பேசும் போது கூறியதாவது:-

சிவசேனா கட்சி மட்டுமே இந்துத்துவா கொள்கையை முழுமையாக கடைபிடித்து வருகிறது.

சிவசேனா கட்சிக்கு பல மாநிலங்களிலும் செல்வாக்கு உள்ளது. இந்து ஓட்டு பிரிந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் சில மாநிலங்களில் சிவசேனா போட்டியிடவில்லை.

ஆனால், இனி அப்படி இருக்க மாட்டோம். எல்லா மாநிலங்களிலும் தனித்து போட்டியிடுவோம். அதில் வெற்றி கிடைத்தாலும் சரி, தோல்வி கிடைத்தாலும் சரி, இந்துத்துவா கொள்கையை ஒரு போதும் கைவிட மாட்டோம்.

பிரதமர் மோடி நாட்டின் தலைவர் என்று கூறுகிறார். ஆனால், எப்போதும் வெளிநாட்டிலேயேதான் இருக்கிறார்.

இஸ்ரேல் பிரதமர் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த போது, அவரை அகமதாபாத்துக்கு பிரதமர் மோடி அழைத்து சென்றிருக்கிறார்.



இஸ்ரேல் பிரதமரை காஷ்மீர் மாநிலத்துக்கு அழைத்து செல்ல முடியுமா? அங்கு ரோடு ஷோ நடத்த முடியுமா? இல்லை லால் சவுக்கில் தேசிய கொடி ஏற்ற முடியுமா? அப்படி செய்திருந்தால் பிரதமரை நாங்கள் பாராட்டி இருப்போம்.

அடுத்த தேர்தலை சந்திக்க கட்சியினர் இப்போதே தயாராக இருக்க வேண்டும். பாராளுமன்ற தேர்தலும், மாநில சட்டசபை தேர்தலும் ஒன்றாக வந்தாலும் சரி, தனியாக வந்தாலும் சரி இந்த இரட்டையும் சந்திக்க சிவசேனா தயாராகவே இருக்கிறது.

இவ்வாறு உத்தவ் தாக்கரே கூறினார். #tamilnews
Tags:    

Similar News