செய்திகள்

தென்னிந்தியாவின் முதலாவது பெண் டாக்சி டிரைவர் செல்விக்கு மத்திய அரசு விருது

Published On 2018-01-22 21:21 GMT   |   Update On 2018-01-22 21:21 GMT
தென்னிந்தியாவின் முதலாவது பெண் டாக்சி டிரைவர் செல்விக்கு ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விழாவில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந் ‘முதல் பெண்மணி’ விருது வழங்கினர்.
புதுடெல்லி:

தத்தமது துறைகளில் முதன்மையானவராக திகழ்ந்து மைல்கல் சாதனை படைத்த பெண்மணிகளுக்கு ‘முதல் பெண்மணிகள் சாதனையாளர் விருது’ என்ற விருதை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வழங்கி வருகிறது.

இந்த ஆண்டு இந்த விருதுக்கு 112 பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு டெல்லியில், ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விழாவில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி மேனகா காந்தியும் ‘முதல் பெண்மணி’ விருது வழங்கினர்.

இந்த விருது பெற்றவர்களில், தென்னிந்தியாவின் முதலாவது பெண் டாக்சி டிரைவர் என்ற பெருமையை பெற்ற செல்வியும் ஒருவர். இவர், பெங்களூருவை சேர்ந்தவர். தனது 14-வது வயதில், கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்டவர். கணவரின் சித்ரவதையை தாங்க முடியாமல், 18-வது வயதில் கணவரை பிரிந்து விட்டார். டாக்சி டிரைவராக பணிபுரிய தொடங்கி, தற்போது சொந்தமாக டாக்சி நிறுவனம் நடத்தி வருகிறார்.

செல்வியை பற்றி கனடாவை சேர்ந்த ஆவணப்பட இயக்குனர் எலிசா பலோஸ்சி என்பவர் ‘டிரைவிங் வித் செல்வி’ என்ற ஆவணப்படம் எடுத்துள்ளார். செல்வி, பல தடைகளை கடந்து சாதனை படைத்ததாகவும், அவரது சாதனைகளால் பெருமைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். 
Tags:    

Similar News