செய்திகள்
மும்பை தொடர் குண்டு தாக்குதலில் பலியானவர்களுக்கு மலர் வளையம் வைத்து இஸ்ரேல் பிரதமர் அஞ்சலி
மும்பை தொடர் குண்டு தாக்குதலில் பலியானவர்களுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு இன்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். #Netanyahu #mumbaiattack
மும்பை:
பாகிஸ்தான் நாட்டில் இயங்கிவரும் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் கடந்த 26-11-2008 முதல் 29-11-2008 வரை இந்தியாவின் வர்த்தக நகரமான மும்பை நகரில் தாஜ் மஹால் பேலஸ் ஹோட்டல் உள்பட 12 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தினர். இந்த தொடர்குண்டு வெடிப்பு தாக்குதல்களில் 166 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு இன்று மும்பை நகருக்கு வந்தார். மும்பை நகரில் தாஜ் மஹால் பேலஸ் ஹோட்டலுக்கு சென்ற அவர், அங்கு தீவிரவாத தாக்குதலில் பலியானவர்களின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் மகாராஷ்டிர முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் வந்திருந்தார்.
பின்னர், அருகாமையில் உள்ள நாரிமன் ஹவுஸ் வளாகத்துக்கு சென்ற பெஞ்சமின் நேதன்யாகு அங்கு தீவிரவாத தாக்குதலில் பலியான இஸ்ரேல் தம்பதியர் உள்ளிட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது, குழந்தையாக இருந்தபோது இந்த தாக்குதலில் தப்பி உயிர் பிழைத்த இஸ்ரேலை சேர்ந்த (தற்போது பத்து வயது சிறுவன்) மோஷே மற்றும் அவனது வளர்ப்பு தாயாரை அவர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். #tamilnews