காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படைகள் துப்பாக்கி சூடு: இந்திய ராணுவ கேப்டன் காயம்
ஜம்மு:
காஷ்மீரில் இந்திய எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் படைகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி இந்திய ராணுவத்தை சீண்டி வருகிறது. ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது.
நேற்று காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம் சகன் தபக் என்ற இடத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே பாகிஸ்தான் படைகள் அத்துமீறி துப்பாக்கியால் சுட்டுத்தாக்குதல் நடத்தியது. உடனே எல்லை பாதுகாப்புப்படை பிரிவினரும், ராணுவத்தினரும் எதிர் தாக்குதலில் ஈடுபட்டார்கள். இதில் இந்திய ராணுவ கேப்டன் காயம் அடைந்தார்.
ராணுவம் பதிலடி கொடுத்ததும் பாகிஸ்தான் படைகள் பின்வாங்கி விட்டன. இந்த மோதலால் எல்லையில் பதட்டம் ஏற்பட்டதைத் தொடர்ந்து எல்லை கிராமங்களான சகன் தா பக்-ரவலாகோட் இடையே பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
நேற்று முன்தினம் எல்லையில் நடந்த துப்பாக்கி சண்டையில் பாகிஸ்தான் ராணுவ மேஜர் உள்பட 7 வீரர்கள் பலியானார்கள். இந்த தாக்குதல் நடந்த நிலையில் மறுநாளே பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.