செய்திகள்

பீகார்: முதல் மந்திரி சென்ற கார் மீது கல்வீசி தாக்குதல் - காயமின்றி தப்பினார் நிதிஷ்

Published On 2018-01-12 17:49 GMT   |   Update On 2018-01-12 17:49 GMT
பீகார் மாநிலத்தின் புக்சர் மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கச் சென்ற முதல் மந்திரியின் வாகனம் மீது, சிலர் கல் வீசி தாக்குதல் நடத்தினர். இதில் அவரது பாதுகாவலர்கள் காயமடைந்தனர்.
பாட்னா:

பீகார் மாநிலத்தில் பா.ஜ.க. மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி  அமைத்து, நிதிஷ்குமார் முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார்.
 
இதற்கிடையே, மாநிலம் முழுவதும் அரசின் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுவதை பார்வையிடவும், பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கவும் முதல் மந்திரி நிதிஷ்குமார் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதனால் 'விகாஸ் சமிக் ஷா யாத்ரா என்ற பெயரில் நிதிஷ்குமார் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

இந்நிலையில், பீகார் மாநிலத்தில் புக்சர் மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைப்பதற்காக காரில் சென்றார். அப்போது அவரது பாதுகாப்பு வாகனம் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் முதல் மந்திரி பாதுகாவலர்களுக்கு காயம் ஏற்பட்டது. ஆனாலும், முதல் மந்திரி நிதிஷ்குமார் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார்.

அதன்பின், நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்து பேசிய நிதிஷ்குமார், மாநில அரசு நிறைவேற்றும் நலத்திட்டங்களால், மக்கள் பலனடைந்து வருகின்றனர். மக்கள் நலனில் அக்கறை செலுத்தும் இந்த அரசின் செயல்பாடுகளை முடக்க நினைக்கும் சக்திகள், எனக்கு எதிராக சிலரை தூண்டி வேடிக்கை பார்க்கின்றன. ஆனால், எதற்கும் கவலைப்படாமல் மக்கள் பணியாற்றி வருவேன் என்றார்.

முதல் மந்திரி சென்ற கார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியது தொடர்பாக, மாநில அரசு விசாரணை குழுவை அமைத்துள்ளது. அந்த குழு உரிய விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கவுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News