செய்திகள்
ஒட்டுமொத்த உச்ச நீதிமன்றமும் ஒருமித்த கருத்திற்கு வரவேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி
நீதிபதிகள் உள்ளிட்ட ஒட்டுமொத்த உச்ச நீதிமன்றமும் ஒருமித்த கருத்திற்கு வரவேண்டும் என பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். #SupremeCourt
புதுடெல்லி:
இந்திய நீதித்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினர். மூத்த நீதிபதிகள் செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், ரஞ்சன்கோகாய், மதன் லோகூர் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசும்போது, உச்ச நீதிமன்ற நிர்வாகம் சரியில்லை என்றும், இதே நிலை நீடித்தால் நீதித்துறையில் ஜனநாயகம் நிலைக்காது என்றும் தெரிவித்தனர். மேலும், தலைமை நீதிபதி மீதும் தங்கள் அதிருப்தியை தெரிவித்தனர்.
நீதிபதிகள் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து அனைத்து தரப்பினரும் விவாதிக்கத் தொடங்கி உள்ளனர். சட்ட வல்லுநர்கள், அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை கூறியவண்ணம் உள்ளனர்.
“நீதிபதிகளை நாம் விமர்சிக்க முடியாது. சட்டத்துறை வாழ்க்கையில் பல தியாகங்களை செய்து இந்த நிலைக்கு வந்துள்ளனர். அவர்களுக்கு மரியாதை அளிக்க வேண்டும். தற்போது பேசிய 4 நீதிபதிகள், தலைமை நீதிபதி உள்ளிட்ட ஒட்டுமொத்த உச்ச நீதிமன்றமும் ஒத்த கருத்திற்கு வந்து தொடர்ந்து செயல்படுவதை பிரதமர் உறுதி செய்ய வேண்டும்” என பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். #SupremeCourt #tamilnews