செய்திகள்
பாராளுமன்றத்தில் மன்மோகன் சிங் - மோடி திடீர் சந்திப்பு: கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்
பாராளுமன்ற மாநிலங்களவை கூட்டத்தின் இறுதிநாளான இன்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை பிரதமர் மோடி சந்தித்து கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். #ModimeetManmohan #Parliament
புதுடெல்லி:
குஜராத் உள்ளிட்ட சில மாநில சட்டசபை தேர்தலுக்கு பின்னர் 2017-ம் ஆண்டுக்கான பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 15-12-2017 அன்று தொடங்கியது.
முன்னதாக, குஜராத் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் செய்த பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முன்னாள் துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி ஆகியோரை பாகிஸ்தானுடன் தொடர்புப்படுத்தி பேசிய கருத்துக்கு கண்டனம் தெரிவித்தும், இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவையின் நடவடிக்கைகளில் முட்டுக்கட்டை ஏற்பட்டது.
இந்நிலையில், மொத்தம் 13 நாட்கள் நடைபெற்ற பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தேதி குறிப்பிடாமல் இன்று ஒத்தி வைத்தார்.
இதேபோல், மாநிலங்களவையும் இன்று தேதி குறிப்பிடப்படாமல் இன்று பிற்பகல் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பை துணை ஜனாதிபதியும் மாநிலங்களவை சபாநாயகருமான வெங்கய்யா நாயுடு தெரிவித்த பின்னர் மரபுகளின்படி ‘வந்தே மாதரம்’ பாடல் இசைக்கப்பட்டது.
பின்னர், பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமரும் வரிசையை நோக்கி வந்தார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சில உறுப்பினர்களை அவர் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். மன்மோகன் சிங்குடன் சிறிது நேரம் பேசிய மோடி அவையை விட்டு வெளியேறினார். #ModimeetManmohan #Parliament #tamilnews