செய்திகள்

அமெரிக்காவுக்கு எதிராக வடகொரியா சிறப்பாக செயல்பட்டு வருகிறது: பினராயி விஜயன் பாராட்டு

Published On 2018-01-04 21:31 GMT   |   Update On 2018-01-04 21:31 GMT
வடகொரியாவுக்கு அமெரிக்கா கொடுத்துவரும் அழுத்தங்களை அந்நாடு வெற்றிகரமாக எதிர்கொண்டு வருவதாக கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் கூறியுள்ளார்.
திருவனந்தபுரம்:

வடகொரியாவுக்கு அமெரிக்கா கொடுத்துவரும் அழுத்தங்களை அந்நாடு வெற்றிகரமாக எதிர்கொண்டு வருவதாக கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் கூறியுள்ளார். கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் கலந்துக்கொண்டார். அந்த நிகழ்ச்சியில்தான் வடகொரியா அரசிற்கு ஆதரவாக பேசியுள்ளார்.


இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, வடகொரியாவும், அமெரிக்காவும் அணு ஆயுத தாக்குதல் நடத்துவதாக கூறி ஒருவரை ஒருவர் மிரட்டி வருகின்றனர். வடகொரியா அமெரிக்காவுக்கு எதிராக கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. அமெரிக்காவால் ஏற்படுத்தபட்ட அழுத்தத்தை வடகொரியா எதிர்கொள்வதில் வெற்றி பெற்றுள்ளது. இதில் சீனாவை விட வடகொரியா சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு சீனாவால் மற்ற சக்திகளை எதிர்க்க முடியவில்லை, என்று அவர் தெரிவித்துள்ளார்.

வடகொரியாவை ஆதரிக்கும் வகையில் கேரள முதல்வர் பேசியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, கடந்த மாதம் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட கூட்டத்திற்கான விளம்பர பேனரில் மற்ற உலக கம்யூனிஸ்ட் தலைவர்கள் படங்களுடன் வடகொரிய அதிபரின் படம் இடம்பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News