செய்திகள்
அன்னிய செலாவணி மோசடி வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக விஜய் மல்லையா அறிவிப்பு
அன்னிய செலாவணி மோசடி வழக்கில் விஜய் மல்லையாவை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டது.
புதுடெல்லி:
இந்தியாவின் பல்வேறு வங்கிகளில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வாங்கிய பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, அவற்றை திருப்பி செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டு உள்ளார். அவர் மீது இந்தியாவின் பல்வேறு கோர்ட்டுகளில் வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், அவர் தற்போது இங்கிலாந்தில் தலைமறைவாக உள்ளார். அவரை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டு உள்ள இந்திய அரசு இங்கிலாந்தில் சட்ட போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளது.
இங்கிலாந்து நிறுவனத்துக்கு 2 லட்சம் டாலர்களை (சுமார் ரூ.1 கோடியே 30 லட்சம்) சட்ட விரோதமாக பரிமாற்றம் செய்ததாக மல்லையா மீது அமலாக்கப்பிரிவு வழக்குப்பதிவு செய்து இருந்தது. அன்னிய செலாவணி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் மல்லையா மீது அமலாக்கப்பிரிவின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. டெல்லியில் உள்ள தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் விசாரணைக்காக ஆஜராகுமாறு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.
இறுதியாக காலஅவகாசம் வழங்கப்பட்ட 30 நாட்களுக்குள் அவரோ அல்லது அவரது சார்பில் வக்கீலோ ஆஜராகவில்லை.
இதைத்தொடர்ந்து, மல்லையாவை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. #tamilnews #vijaymallya #culprit