திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்: வாலிபர்கள் கைது
திருவனந்தபுரம்:
வளைகுடா நாட்டில் இருந்து கேரளாவுக்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சுங்க இலாகா அதிகாரிகள் மற்றும் புலனாய்வு பிரிவினர் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
நேற்று காலையில் வளைகுடா நாட்டில் இருந்து வந்த விமானத்தில் இருந்து இறங்கி வந்த பயணிகள் மலப்புரத்தைச் சேர்ந்த அபுபக்கர், முகம்மது ஷபி ஆகியோர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களின் உடைமைகளை பரிசோதித்து பார்த்தபோது பேட்டரி பொருட்களுக்குள் 3.17 கிலோ தங்க கட்டிகளை மறைத்து எடுத்து வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1 கோடிக்கும் அதிகமாகும். அதனை கைப்பற்றிய அதிகாரிகள் அபுபக்கர், முகம்மது ஷபி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இவர்கள் 2 பேருமே தங்கம் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இவர்கள் யாருக்காக தங்க கடத்தலில் ஈடுபட்டார்கள்? என்பது பற்றி அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.