செய்திகள்

கிறிஸ்துமஸ் திருநாள்: பூரி கடற்கரையில் பிரமாண்டமான ‘சான்ட்டா கிளாஸ்’ மணல் ஓவியம்

Published On 2017-12-24 14:28 GMT   |   Update On 2017-12-24 14:28 GMT
கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு ஒடிசா மாநிலம் பூரி நகரின் கடற்கரையில் பிரமாண்டமான ‘சான்ட்டா கிளாஸ்’ (கிறிஸ்துமஸ் தாத்தா) மணல் ஓவியம் வரைந்து சுதர்சன் பட்நாயக் சாதனை படைத்துள்ளார்.
புவனேஸ்வர்:

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுதர்சன் பட்நாயக் உள்நாட்டில் நடக்கும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களை செதுக்கி மக்களின் மனங்களிலும் அந்த பாதிப்பை உண்டாக்கி வருகிறார்.

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் கடந்த ஆண்டு நடந்த சர்வதேச மணற்சிற்ப போட்டியில் இந்தியாவின் பிரபல மணற்சிற்ப கலைஞரான சுதர்சன் பட்நாயக் தங்கப் பதக்கத்தை வென்று தாய்நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.

இந்நிலையில், நாளை கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு ஒடிசா மாநிலம் பூரி நகரின் கடற்கரையில் பிரமாண்டமான ‘சான்ட்டா கிளாஸ்’ (கிறிஸ்துமஸ் தாத்தா) முகத்தை ‘உலக அமைதி’ என்ற தலைப்புடன் மணல் ஓவியம் வரைந்து சுதர்சன் பட்னாயக் சாதனை படைத்துள்ளார். 25 அடி உயரம், 50 அடி அகலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் தாத்தாவின் முகத்தின் அருகில் இயேசு கிறிஸ்துவின் சிலையையும் இவர் உருவாக்கியுள்ளார்.

தனது மணல் சிற்ப கலைக்கூடத்தை சேர்ந்த 40 மாணவர்களின் துணையுடன் 600 டன் மணலை வைத்து சுமார் 35 மணிநேர உழைப்பில் உருவான இந்த மணல் சிற்பங்கள் வரும் ஜனவரி மாதம் முதல் தேதி பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்படும்.
Tags:    

Similar News