செய்திகள்

மோசடி மூலம் கடந்த நிதியாண்டில் வங்கிகளுக்கு ரூ.17 ஆயிரம் கோடி வரை இழப்பு: நிதியமைச்சகம் தகவல்

Published On 2017-12-22 22:23 GMT   |   Update On 2017-12-22 22:23 GMT
மோசடி மற்றும் திருட்டுகள் மூலமாக கடந்த நிதியாண்டில் வங்கிகளுக்கு ரூ.17 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய நிதித்துறை இணை மந்திரி சிவ பிரதாப் சுக்லா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி: 

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 15-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. நேற்று நடைபெற்ற கூட்டத்தின் போது பேசிய மத்திய நிதித்துறை இணைமந்திரி சிவ பிரதாப் சுக்லா, மோசடி மூலம் கடந்த நிதியாண்டில் வங்கிகளுக்கு சுமார் 16,789 ஆயிரம் கோடி ருபாய் வரையில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதுகுறித்து மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அவர் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:



வணிக வங்கிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிதி நிறுவனங்களின் மோசடி கண்காணிப்பு குழு சமர்ப்பித்த அறிக்கையின்படி கடந்த 2016-17ம் ஆண்டில் மட்டும் நிதிமோசடி காரணமாக வங்கிகளுக்கு 16,786 கோடி ரூபாய் வரையில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது தவிர கடந்த நிதியாண்டில் நாட்டின் பல பகுதிகளில் நிகழ்ந்த வங்கி கொள்ளை, திருட்டு உள்ளிட்டவற்றால் மொத்தம் ரூ.65.3 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த 2017-18 நிதியாண்டின் முதல் அரையாண்டில் மட்டும் 393 கொள்ளை சம்பவங்கள் மூலம் ரூ.18.48 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே, வங்கி கிளைகள் மற்றும் அதன் ஏடிஎம்களில் பாதுகாப்பை அதிகரிக்கவும் ரிசர்வ் வங்கி அவ்வப்போது வங்கிகளை அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.

மற்றொரு கேள்விக்கு மத்திய நிதித்துறை இணைமந்திரி பி.ராதாகிருஷ்ணன் மக்களவையில் அளித்த பதிலில், “சமீபத்தில் வெளியிடப்பட்ட 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை போன்ற கள்ள நோட்டுகளும் பல்வேறு பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தவிர உயர்மதிப்பிலான ரூ.2000 மற்றும் ரூ.500 நோட்டுக்கள் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படவில்லை என தெரியவந்துள்ளது”, என கூறினார்.
Tags:    

Similar News