செய்திகள்

பாகிஸ்தான், இலங்கை சிறைகளில் இந்திய மீனவர்கள் 681 பேர் உள்ளனர்: மாநிலங்களவையில் வி.கே.சிங் தகவல்

Published On 2017-12-21 12:27 GMT   |   Update On 2017-12-21 12:27 GMT
பாகிஸ்தான் மற்றும் இலங்கை சிறைகளில் 681 இந்திய மீனவர்கள் உள்ளனர் என மாநிலங்களவையில் வெளியுறவு துறை இணை மந்திரி வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 15-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியினர், குஜராத் தேர்தலின் போது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மீது சுமத்தப்பட்ட விமர்சனத்துக்கு பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி வருகின்றனர். இதனால் இரண்டு அவைகளும் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இன்று மாநிலங்களவையில் வெளியுறவு துறை இணை மந்திரி வி.கே.சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில் கூறியதாவது:



பாகிஸ்தான் சிறைகளில் 537 இந்திய மீனவர்களும், இலங்கை சிறைகளில் 144 இந்திய மீனவர்களும் உள்ளனர். இதேபோல் பாகிஸ்தான் வசம் சுமார் 1000 படகுகளும், இலங்கை வசம் 144 படகுகளும் இருந்து வருகின்றன.

பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு இடையே நல்லெண்ண அடிப்படையில் மீனவர்களை விடுவிக்க வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதையடுத்து, இருதரப்பினரும் தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள மீனவர்களை விடுவித்து வருகின்றனர்.

இந்தாண்டில் அண்டை நாட்டு சிறைகளில் இருந்து விடுதலையான 363 மீனவர்களின் மறுவாழ்வுக்கு தேவையான நடவடிக்கைகளை செய்துள்ளது. இதில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 245 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News