செய்திகள்

உத்தரபிரதேசத்தில் பள்ளிகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட எதிர்ப்பு

Published On 2017-12-20 06:59 GMT   |   Update On 2017-12-20 06:59 GMT
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பள்ளிகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட இந்துத்துவா அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அலிகரா:

உத்தரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யாத் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பள்ளிகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட இந்துத்துவா அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அலிகாவில் உள்ள பள்ளியில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுவதில் மாணவர்கள் கட்டாய மத மாற்றம் செய்யப்படுகின்றனர். இதனால் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடக்கூடாது என்று இந்து ஜாக் ரன் மஞ்ச் என்ற அமைப்பு எச்சரித்துள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அந்த அமைப்பு கடிதம் மூலம் பள்ளிகளுக்கு தெரிவித்து உள்ளது.

இதுதொடர்பாக அந்த அமைப்பின் அலிகான் மாவட்ட தலைவர் சோனு சவிதா கூறும்போது, “மாணவர்ளுக்கு பரிசு பொருட்களை வழங்கி கிறிஸ்துமஸ் கொண்டாடுவதால் அதன் மூலம் எளிமையாக கவரப்படுகின்றனர்.

இதனால் கிறிஸ்துமஸ் கொண்டாடினால் பள்ளிகள் முன்பு போராட்டம் நடத்தப்படும்” என்றார்.

இந்துத்துவா அமைப்பின் இந்த மிரட்டலால் அலிகானில் உள்ள பள்ளிகள் கலக்கம் அடைந்துள்ளன.


இதுகுறித்து பள்ளிகளின் பெற்றோர் சங்க ஒருங்கிணைப்பாளர் அனுராக் குப்தா கூறும்போது, “மாணவர்கள் பல்வேறு மதம் மற்றும் கலாச்சாரங்களை கொண்டாடுவதற்காக பள்ளியில் அனைத்து பண்டிகைகளும் கொண்டாடப்படுகின்றன. இந்த மிரட்டலால் எங்களுக்கு பயம் ஏற்பட்டு உள்ளது என்றார்.

மாவட்ட கலெக்டர் ரிஷிகேஷ் பாஸ்கர் கூறும்போது, “இதுகுறித்து எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு எதிராக யாராவது செயல்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்போம்” என்றார்.

Tags:    

Similar News