செய்திகள்
கேரளா: ஆளும்கட்சி கூட்ட பேனரில் வடகொரிய அதிபரின் புகைப்படத்தால் பரபரப்பு
கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் புகைப்படம் இடம்பெற்றிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவனந்தபுரம்:
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள நெடுகண்டத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதி கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்காக பல இடங்களில் உலக கம்யூனிஸ்ட் தலைவர்களின் புகைப்படம் அடங்கிய பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அந்த வகையில் பம்பதும்பரா பகுதியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் வைக்கப்பட்ட பேனரில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது.
இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். கம்யூனிஸ்ட் கட்சி பேனர்களில் வடகொரிய அதிபரின் புகைப்படம் இடம்பெற்றிருந்ததற்கு சொந்த கட்சி தலைவர்களும் அதிருப்தி தெரிவித்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வாரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்திய கூட்டத்திற்காக வைக்கப்பட்ட பேனர்களில் ஏசு கிறிஸ்துவின் படம் இடம்பெற்றிருந்ததற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.