செய்திகள்

பாலியல் தொல்லை கொடுத்த அதிகாரியை செருப்பால் அடித்த ஆசிரியை

Published On 2017-12-13 04:55 GMT   |   Update On 2017-12-13 04:55 GMT
ஆந்திர மாநிலத்தில் பாலியல் தொல்லை கொடுத்த அதிகாரியை ஆசிரியை செருப்பால் அடித்த சம்பவம் சக ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நகரி:

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் மார்க்காபுரம் மண்டல கல்வி அதிகாரியாக பணியாற்றி வருபவர் ராம்தாஸ் நாயக். இவர் சில மாதங்களாக பள்ளி ஆசிரியை ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். இதை ஆசிரியை கண்டித்த போதும் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில் ஆசிரியை பள்ளி வகுப்பறையில் பாடம் நடத்தி கொண்டிருந்தபோது அங்கு வந்த அதிகாரி ராம்தாஸ் நாயக் பாலியல் தொல்லை கொடுக்க முயன்றார். அதனால் ஆவேசமடைந்த ஆசிரியை தனது செருப்பை கழற்றி அதிகாரியை சரமாரியாக அடித்தார். இதைபார்த்த சக ஆசிரியர்கள், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆசிரியையை சமாதானப்படுத்தி அதிகாரியை மீட்டனர்.

இதுகுறித்து ஆசிரியை மாவட்ட கல்வி அதிகாரியிடம் புகார் செய்தார். இதற்கிடையே பாலியல் தொல்லை கொடுத்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க சொல்லி ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News