செய்திகள்

பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர்: நாளை அனைத்து கட்சி கூட்டம்

Published On 2017-12-13 00:30 GMT   |   Update On 2017-12-13 00:30 GMT
பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நாளை மறுதினம் தொடங்க உள்ள நிலையில், அனைத்து கட்சி கூட்டம் நாளை நடைபெறும் என சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நாளை மறுதினம் தொடங்க உள்ள நிலையில், அனைத்து கட்சி கூட்டம் நாளை நடைபெறும் என சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்துள்ளார்.
 
பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டில் குளிர்கால கூட்டத்தொடர் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிடாமல் இருந்து வந்தது.

குஜராத் தேர்தல் நடைபெற உள்ளதால் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் குறித்து அறிவிக்காமல் மத்திய அரசு தாமதப்படுத்தி வருகிறது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன.



இந்நிலையில், பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 15ம் தேதி முதல் தொடங்கும் என சமீபத்தில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘மத்திய அமைச்சரவையின் கூட்டத்தில் பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடரை டிசம்பர் 15-ம் தேதி தொடங்கி ஜனவரி 5-ம் தேதி வரை நடத்த முடிவாகி உள்ளது.

இந்த கூட்டத்தை அமைதியாக நடத்துவது தொடர்பாக, நாளை அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு, மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்த குமார் கூறுகையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிச.15ல் தொடங்குவதால் நாளை அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெறும். இதில் அனைத்து கட்சிகளும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதே நாளில், எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டமும் நடக்கிறது. இதை காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ஏற்பாடு செய்துள்ளார். இதில் நாடாளுமன்றத்தில், ஆளும் கூட்டணியை எதிர்கொள்வது தொடர்பான வியூகங்கள் பற்றி ஆலோசிக்கப்பட உள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குஜராத் தேர்தலுக்கு பின்னர் முதல் முறையாக நாடாளுமன்ற கூட்டம் தொடங்குவதால் அனல் பறக்கும் விவாதங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News