செய்திகள்
டிக்கெட் கட்டணம் உயர்வால் வெறிச்சோடும் டெல்லி மெட்ரோ ரெயில்கள்
டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டதால் தலைநகர் டெல்லியில் மெட்ரோ ரெயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதாக என ஆர்.டி.ஐ. மூலம் பெறப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
டெல்லியில் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப பல்வேறு விதமான போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டது. இதற்கு பெரும் வரவேற்பு இருந்த நிலையில், சமீபத்தில் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டது.
மெட்ரோ ரெயில் கட்டண நிர்ணய குழு சார்பில் கடந்த மாதம் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மெட்ரோ ரெயில்களில் டிக்கெட் கட்டணம் ரூ.10 வரை உயர்த்தப்பட்டது. இந்த கட்டண உயர்வு கடந்த அக்டோபர் 10-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
இந்நிலையில், கட்டண உயர்வு அமலுக்கு வந்தபின் டெல்லி மெட்ரோ ரெயிலில் பயணம் செய்யும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என தகவல் உரிமை ஆணையத்தின் அறிவிக்கை தெரிவிக்கிறது.
இதுதொடர்பாக, ஆர்.டி.ஐ. வெளியிட்ட அறிக்கையில், டெல்லி மெட்ரோ ரெயிலின் கட்டணம் கடந்த அக்டோபர் 10-ம் தேதி முதல் உயர்த்தப்பட்டு உள்ளது. இதையடுத்து, அக்டோபர் 10-ம் தேதிக்கு பிறகு மெட்ரோ ரெயிலில் பயணம் செய்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை சராசரியாக 3 லட்சத்துக்கும் மேலாக குறைந்துள்ளது என கூறப்பட்டுள்ளது.