செய்திகள்

சசிகலாவுடன் இன்று வக்கீல் அசோகன் சந்திப்பு

Published On 2017-11-22 08:29 GMT   |   Update On 2017-11-22 08:29 GMT
வருமான வரித்துறை அதிகாரிகள் சசிகலாவிடம் விசாரணை நடத்த உள்ள நிலையில், அவரை இன்று வக்கீல் அசோகன் சந்தித்து பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
பெங்களூரு:

சசிகலா உறவினர்கள் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட 187 இடங்களில் 5 நாட்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ. 7 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ. 5 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள் சிக்கின.

ரூ.1430 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. 70க்கும் அதிகமான போலி நிறுவனங்களை நடத்தி அதன் மூலம் ரூ.1,012 கோடிக்கு முறைகேடு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் 15 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.

ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டில் உள்ள சசிகலாவின் 4 அறைகளிலும், ஜெயலலிதாவிடம் உதவியாளராக இருந்த பூங்குன்றன் அறையிலும் நடந்த சோதனையில் லேப்டாப், 2 செல்போன் டேப் மற்றும் ஏராளமான பென் டிரைவ்களும், சில முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

இந்த ஆவணங்கள் மூலம் சசிகலா உறவினர்கள் நடத்தி வந்த போலி நிறுவனங்களின் குறியீட்டு எண்கள் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு கிடைத்து உள்ளன.



இதை அடிப்படையாக கொண்டு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலா, இளவரசியிடம் விசாரணை நடத்த வருமான வரி புலனாய்வுத் துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை இன்று பகலில் வக்கீல் அசோகன் சந்தித்து பேசினார்.

வருமானவரித்துறை அதிகாரிகள் சசிகலாவிடம் விசாரணை நடத்த உள்ள நிலையில் வக்கீல் அசோகன் சசிகலாவை சந்தித்து பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏற்கனவே சசிகலா தொடர்பான வழக்குகளில் அசோகன் ஆஜராகி வந்ததும் குறிப்பிடத்தக்கது. இவர் சசிகலாவின் உறவினர் ஆவார்.

Tags:    

Similar News