search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வருமான வரித்துறை சோதனை"

    • வருமான வரித்துறை அதிகாரிகள் லிங்கராஜிடம் ரூ.2 கோடியே 85 லட்சம் பணத்துக்கு கணக்கு கேட்டுள்ளனர்.
    • அடுத்த கட்ட விசாரணையை வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரசாரம் நேற்று மாலை முடிவுக்கு வந்துள்ளது.

    தேர்தலையொட்டி பண பட்டுவாடாவை தடுப்பதற்காக பறக்கும் படையினரும், வருமான வரித்துறை அதிகாரிகளும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

    பிரசாரம் ஓய்ந்து தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. இந்த நிலையிலும் வருமான வரித்துறையினர் தங்களது சோதனையை தொடர்ந்து வருகிறார்கள். அமலாக்கத்துறை சோதனையும் நீடித்து வருகிறது.

    அந்த வகையில் சென்னை பல்லாவரத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகரின் வீடு மற்றும் நிறுவனத்தில் நேற்று நள்ளிரவில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டுள்ளனர்.

    சென்னை பழைய பல்லாவரம் சாலையில் வசித்து வருபவர் லிங்கராஜ். அ.தி.மு.க. பிரமுகரான இவர் அப்பகுதியில் பிரபலமான நபராக விளங்கி வருகிறார். இவர் பள்ளிக்கரணை பகுதியில் ரேடியல் சாலையில் பி.எல்.ஆர். புளூமெட்டல் என்ற பெயரில் ஜல்லி, கிரஷர் மற்றும் ரெடிமிக்ஸ் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

    நேற்று நள்ளிரவு 12.30 மணி அளவில் லிங்கராஜின் வீடு மற்றும் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். வரி ஏய்ப்பு புகாரின் பேரில் சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த சோதனையில் லிங்கராஜின் 'ரெடிமிக்ஸ்' நிறுவனத்தில் ரூ.1 கோடி பணம் கைப்பற்றப்பட்டு உள்ளது. பழைய பல்லாவரத்தில் உள்ள லிங்கராஜின் வீட்டில் ரூ.1 கோடியே 85 லட்சம் பணம் இருந்தது. அதையும் வருமான வரித்துறை அதிகாரிகள் மொத்தமாக பறிமுதல் செய்தனர்.

    2 இடங்களிலும் நடைபெற்ற சோதனையில் ரூ.2 கோடியே 85 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பாராளுமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் அ.தி.மு.க. பிரமுகரான லிங்கராஜின் வீடு மற்றும் நிறுவனத்தில் ரூ.2 கோடியே 85 லட்சம் பணம் பிடிபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வரி ஏய்ப்பு புகாரின் பேரிலேயே வருமான வரி சோதனை நடத்தப்பட்டிருப்பதாக கூறப்பட்டாலும் தேர்தல் நேரம் என்பதால் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக இவ்வளவு பணமும் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததா? என்கிற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அது தொடர்பான விசாரணையும் முடுக்கி விடப்பட்டு உள்ளது.

    வருமான வரித்துறை அதிகாரிகள் லிங்கராஜிடம் ரூ.2 கோடியே 85 லட்சம் பணத்துக்கு கணக்கு கேட்டுள்ளனர். தேர்தல் நேரத்தில் இந்த பணத்தை எப்படி எடுத்துச் சென்றீர்கள்? அதற்குரிய கணக்கு உள்ளதா? என்பது போன்ற கேள்விகளை கேட்டு அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதன் முடிவிலேயே இந்த பணத்தின் பின்னணி என்ன? என்பது தெரியவரும்.

    லிங்கராஜின் வீடு மற்றும் நிறுவனத்தில் நேற்று இரவு 12.30 மணிக்கு தொடங்கிய வருமான வரி சோதனை இன்று காலை 6 மணி அளவில் நிறைவு பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்த பணத்துடன் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

    சுமார் 5½ மணி நேரம் நடத்திய சோதனையில் லிங்கராஜின் நிறுவனம் மற்றும் அலுவலகத்தில் இருந்த ஆவணங்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இது தொடர்பாக அடுத்த கட்ட விசாரணையை வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.

    • புதுச்சேரி லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் மெயின் ரோட்டில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது.
    • தேர்தல் துறை அதிகாரி சண்முகவேல் தலைமையிலான குழுவினர் சென்று பைக்கில் நின்று கொண்டிருந்த 2 பேரிடம் சோதனையிட்டனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி லாஸ்பேட்டை தாகூர் நகர் 11-வது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் புரந்தரதாசன். இவர் அரசியல் இயக்கம் ஒன்றை நடத்தி வருகிறார்.

    3 மாடி கொண்ட வீட்டின் கீழ் தளத்தில் வசித்து வரும் இவரது வீட்டுக்குச் சென்ற தேர்தல் பறக்கும் படையினர் அங்கு அதிரடியாக சோதனையிட்டனர்.

    அப்போது அங்கு கட்டுக்கட்டாக பணம் இருந்ததை கண்டு பிடித்தனர். இது குறித்து அவர்கள் தெரிவித்த தகவலின் பேரில் ஒரு பெண் அதிகாரி தலைமையில் 6 பேர் கொண்ட வருமான வரித்துறை மற்றும் ஜி.எஸ்.டி. அதிகாரிகள் புரந்தரதாசன் வீட்டில் இருந்த ரூ. 64 லட்சத்து 60 ஆயிரம் ரொக்கம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

    இந்த தொகை கடந்த ஆண்டு நிலம் விற்பனை செய்ததின் மூலம் கிடைத்ததாக அங்கிருந்த புரந்தரதாசன் தெரிவித்தார். மேலும் அதற்கான சில ஆவணங்களையும் காண்பித்தார்.

    ஆனால் அதனை அதிகாரிகள் ஏற்க மறுத்தனர். ரூ.10 லட்சத்துக்கு மேல் பதுக்கி வைத்திருக்க கூடாது என்று கூறி பணம் எண்ணும் எந்திரத்தை கொண்டு வந்து பணத்தை எண்ணினர். பின்னர் ரூ. 64 லட்சத்து 60 ஆயிரத்தை வருமான வரி அதிகாரிகள் பறிமுதல் செய்து கொண்டு சென்றனர்.

    இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதற்கிடையே புதுச்சேரி லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் மெயின் ரோட்டில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் தேர்தல் துறை அதிகாரி சண்முகவேல் தலைமையிலான குழுவினர் அங்கு சென்று பைக்கில் நின்று கொண்டிருந்த 2 பேரிடம் சோதனையிட்டனர்.

    அவர்கள் 500 ரூபாய் நோட்டுகள் ரொக்கமாக ரூ.25 ஆயிரம் வைத்திருந்தனர். அவர்களை லாஸ்பேட்டை புறக்காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.

    விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த சக்திகுமார் மற்றும் தருமன் என்பது தெரியவந்தது. இருவரும் பா.ஜனதாவிற்கு வாக்களிக்க வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் வைத்திருந்த ரூ.25 ஆயிரம் பணத்தை தேர்தல் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதுபோல் புதுச்சேரியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த அரசியல் கட்சியை சேர்ந்த மேலும் 2 பேரை தேர்தல் பறக்கும் படையினர் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுரேஷ் ராஜனை செல்போனில் தொடர்பு கொண்டு அவரது அறைக்கு வருமாறு அழைக்கவே, அவரும் விடுதி அறைக்கு வந்து அறையை திறந்து கொடுத்துள்ளார்.
    • சுமார் 5 மணிநேரம் நடந்த சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கட்டுக்கட்டாக ரூ.11 லட்சம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    தென்காசி:

    தி.மு.க. முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ்ராஜன். இவர் நெல்லை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியின் தி.மு.க. தேர்தல் பொறுப்பாளராக செயல்பட்டு வருகிறார்.

    இவர் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கடையம் ஒன்றிய பகுதிகளில் தேர்தல் பணியாற்றினாலும், பழைய குற்றாலம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி உள்ளார்.

    சம்பவத்தன்று அவர் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் வருமான வரித்துறையினர் அவர் தங்கி இருந்த பழைய குற்றாலம் தனியார் விடுதிக்கு சென்றுள்ளனர்.

    பின்னர் அவர்கள் சுரேஷ் ராஜனை செல்போனில் தொடர்பு கொண்டு அவரது அறைக்கு வருமாறு அழைக்கவே, அவரும் விடுதி அறைக்கு வந்து அறையை திறந்து கொடுத்துள்ளார்.

    பின்னர் உள்ளே சென்று வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். மதியம் 3 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரையிலும் சுமார் 5 மணிநேரம் நடந்த இந்த சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கட்டுக்கட்டாக ரூ.11 லட்சம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர்.

    இதற்கிடையே முன்னாள் அமைச்சர் தங்கியிருந்த அறையில் சோதனை நடைபெற்ற செய்தி அந்த பகுதியில் வேகமாக பரவியது. இதனால் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அந்த விடுதியின் முன்பு குவிந்தனர். தனியார் விடுதிக்குள் வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • காங்கிரஸ் பிரமுகர் பணம் பட்டுவாடா செய்ய பதுக்கி வைத்திருப்பதாக வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல்.
    • காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் வருமானவரித்துறை நடத்திய சோதனையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அருகே கிருமாம்பாக்கம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் மோகன் தாஸ். காங்கிரஸ் பிரமுகரான இவர், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமியின் தீவிர ஆதரவாளர் ஆவார்.

    இவர் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக ஏம்பலம் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்தநிலையில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்காளர்களுக்கு காங்கிரஸ் பிரமுகர் மோகன் தாஸ் பணம் பட்டுவாடா செய்ய பதுக்கி வைத்திருப்பதாக வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது.

    இதையடுத்து கிருமாம்பாக்கத்தில் உள்ள மோகன்தாஸ் வீட்டுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் 5 பேர் கொண்ட குழுவினர் காரில் வந்தனர். அவர்கள், மோகன் தாஸ் வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்தனர்.

    அப்போது அங்கு மோகன் தாஸ் இல்லை. அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அவரது தாயார் மட்டும் வீட்டில் இருந்தார். அவரிடம், சோதனையிட வந்திருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதை அறிந்த மோகன் தாஸ் வீட்டுக்கு விரைந்து வந்தார். பின்னர் அவரது முன்னிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் வீடு முழுவதும் தீவிரமாக சோதனை செய்தனர். மேலும் அவரிடம் தொழில் தொடர்பான ஆவணங்களின் விவரங்களை கேட்டறிந்தனர். அதன் பின் வருமானவரித்துறை அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

    இந்த சோதனையின் முடிவில் பணமோ, ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை என கூறப்படுகிறது. காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் வருமானவரித்துறை நடத்திய இந்த திடீர் சோதனையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    கடந்த சில நாட்களுக்கு முன் வைத்திலிங்கம் எம்.பி.யின் உறவினர் வீடுகளில் வருமானவரி அதிகாரிகள் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

    • சோதனையில் வெவ்வேறு அறைகளில் 4 கட்டை பையில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுக்கள் பல லட்ச ரூபாய் பதுக்கி வைத்து இருந்ததை கண்டுபிடித்தனர்.
    • தேர்தல் நேரத்தில் நிதி நிறுவனர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த லட்சக்கணக்கான பணம் சிக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நாமக்கல்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 19-ந்தேதி நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளது. இந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர், போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் சந்தேகப்படும் இடங்களில் தேர்தல் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். இதில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்படும் பணம், நகைகள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு அரசு கருவூலத்தில் சேர்க்கப்பட்டு வருகின்றன.

    இதற்கிடையே தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டதன்படி வருமான வரித்துறை அதிகாரிகளும் களத்தில் இறங்கி உள்ளனர். முறையாக வரி செலுத்தாதவர்கள், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பவர்கள் பட்டியலை சேகரித்து அவர்களின் வீடுகள், நிறுவனங்கள் மற்றும் புகார் தெரிவிக்கப்படும் இடங்களிலும் சோதனை நடத்தி வருகிறார்கள். அதுமட்டுமின்றி தேர்தல் பறக்கும் படையில் ரூ.10 லட்சத்திற்கு மேல் சிக்கினால் அது குறித்தும் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.

    இந்த நிலையில் நாமக்கல் ஈ.பி.காலனியில் வசித்து வருபவர் செல்லப்பன் (வயது 60). தனியார் நிதி நிறுவன அதிபரான இவர், டேங்கர் லாரியும் வைத்துள்ளார். அதோடு ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இதனிடையே நேற்று வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக ஏராளமான பணத்தை நிதிநிறுவன அதிபர் செல்லப்பன் வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கலைச்செல்வன், அயாஸ்கான் தலைமையிலான தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் தலைமையிலான போலீசாரும் தொழில் அதிபர் செல்லப்பன் வீட்டிற்குள் சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

    இந்த சோதனையில் வெவ்வேறு அறைகளில் 4 கட்டை பையில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுக்கள் பல லட்ச ரூபாய் பதுக்கி வைத்து இருந்ததை கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து தேர்தல் அதிகாரிகள் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்கு வந்த 7 பேர் கொண்ட நாமக்கல் வருமான வரித்துறை அதிகாரிகள் குழுவினர் 4 பைகளில் இருந்த ரூபாய் நோட்டுகளை எந்திரம் மூலம் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். சோதனையின் முடிவில் கணக்கில் வராத ரூ.80 லட்சம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகளும் தங்களுடைய பங்களிப்பாக வீடு முழுவதும் தங்களுக்குரிய பாணியில் அதிரடி சோதனை நடத்தினார்கள். வீட்டின் குடிநீர் தொட்டி, பூஜை அறையை திறந்து பார்த்தனர். காலி சிலிண்டரை ஆய்வு செய்தனர். மேலும் வீட்டின் கீழ் தளம், மேல் தளத்தில் உள்ள ஒவ்வொரு அறைகளிலும் பீரோ, கட்டில், மெத்தை, பாத்திரங்கள், சமையல் அறையில் உள்ள பொருட்கள், அரிசி பைகள், பிளாஸ்டிக் டப்பாக்கள் ஆகியவற்றை திறந்து பார்த்தனர். இதில் படுக்கை அறையில் உள்ள கட்டிலுக்கு அடியில் ரூ.45 லட்சம் கட்டுகட்டாக இருந்தது. இந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இருக்கிறதா? என வீட்டில் உள்ளவர்களிடம் கேட்டனர். அதற்கு எந்த ஆவணங்களும் இல்லை என தெரிவிக்கவே அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    மேலும் சோதனையின்போது பீரோவில் நிறைய சொத்து ஆவணங்கள் இருந்தன. அவற்றை எடுத்து ஆய்வு செய்தபோது அவை ரூ.30 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் என தெரியவந்தது. இதற்கு உரிய வருமான வரி செலுத்தப்படுகிறதா? என அதிகாரிகள் கேட்டனர். இதையடுத்து அந்த சொத்து ஆவணங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் செல்லப்பன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் இதைத்தவிர வேறு இடங்களில் சொத்து, நிறுவனங்கள், கடைகள் உள்ளதா? என வருமான வரித்துறை அதிகாரிகள் கேட்டனர். அப்போது அவர்கள் கொடுத்த தகவல்களை பதிவு செய்து கொண்டு பறிமுதல் செய்த பணத்தை அதிகாரிகள் எடுத்துச்சென்றனர். உரிய ஆவணம் சமர்பிக்கப்பட்ட பிறகு பணம் திருப்பி ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த சோதனை இரவு முழுவதும் விடிய, விடிய நடைபெற்றது. இன்று அதிகாலையில் தான் அவர்கள் சோதனையை நிறைவு செய்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

    தொடர்ந்து செல்லப்பன் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பெயரில் உள்ள வங்கி கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது? பரிமாற்றம் எந்த அளவிற்கு மேற்கொள்ளப் பட்டுள்ளது? என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    தேர்தல் நேரத்தில் நிதி நிறுவனர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த லட்சக்கணக்கான பணம் சிக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வீட்டிலுள்ள ஒவ்வொரு பகுதியிலும் அங்குலம்-அங்குலமாக சோதனை நடத்தப்பட்டது.
    • காங்கிரஸ் நிர்வாகி தாமஸ் வீட்டில் சுமார் 11 மணிநேரம் சோதனை நடத்தப்பட்டது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா, ஸ்ரீ மதுரை ஊராட்சிக்கு உட்பட்ட மண்வயல் கம்மாத்தி பகுதியை சேர்ந்தவர் ஏ.ஜெ.தாமஸ். இவர் ஸ்ரீமதுரை ஊராட்சி முன்னாள் தலைவராக பதவி வகித்தவர்.

    மேலும் தமிழக காங்கிரஸ் முக்கிய பிரமுகராகவும் செயல்பட்டு வருகிறார்.

    இந்த நிலையில் காங்கிரஸ் நிர்வாகி தாமஸ் வீட்டில் கோடிக்கணக்கில் பணம் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக வருமானவரித்துறைக்கு ரகசிய தகவல்கள் வந்தது. தொடர்ந்து அவரது வீட்டுக்கு நேற்று காலை 11 மணியளவில் 8 பேர் அடங்கிய வருமான வரித்துறை அதிகாரிகள், 2 கார்களில் புறப்பட்டு வந்தனர்.

    பின்னர் அவர்கள் வீட்டில் உள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து வீட்டிலுள்ள ஒவ்வொரு பகுதியிலும் அங்குலம்-அங்குலமாக சோதனை நடத்தப்பட்டது. மேலும் பீரோ லாக்கர்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    காங்கிரஸ் நிர்வாகி தாமஸ் வீட்டில் சுமார் 11 மணிநேரம் சோதனை நடத்தப்பட்டது. இதில் கத்தை, கத்தையாக 500 ரூபாய் நோட்டுகள் சிக்கியது. கணக்கில் வராத மொத்தம் ரூ.3 கோடி ரொக்கப்பணம் பிடிபட்டது.

    தொடர்ந்து கைப்பற்றப்பட்ட பணத்துக்கான ஆவணங்களை வருமானவரி அதிகாரிகள் கேட்டனர். தாமசிடம் மேற்கண்ட பணத்துக்கான உரிய ஆதாரங்கள் இல்லை என்று தெரிகிறது. பின்னர் ரூ.3 கோடி ரொக்கப்பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர்.

    இதுதொடர்பாக வருமானவரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    கூடலூர் காங்கிரஸ் நிர்வாகி தாமஸ் வீட்டில் கோடிக்கணக்கில் பணம் பதுக்கப்பட்டு இருப்பதாக புகார் வந்ததை தொடர்ந்து அவரது வீட்டில் சுமார் 10 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடத்தினோம். அப்போது அவரது வீட்டில் கணக்கில் வராத ரூ.3 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

    இந்த பணத்தை அவர் பாராளுமன்ற தேர்தலில் செலவழிப்பதற்காக பதுக்கி வைத்திருந்தாரா என்பது பற்றிய விவரம் தெரியவில்லை. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

    நீலகிரி மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒருசில நாட்களே இருக்கும் சூழ்நிலையில், கூடலூர் காங்கிரஸ் நிர்வாகி தாமஸ் வீட்டில் கணக்கில் வராத ரூ.3 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்கள்.
    • கூடுதல் விவரங்களை வருமான வரித்துறையினர் விரைவில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலையொட்டி பறக்கும் படை அதிகாரிகள் பணப்பட்டுவாடாவை தடுக்க 24 மணி நேரமும் தீவிர சோதனை நடத்தி வரும் நிலையில் வருமான வரித்துறையினரும் தொடர்ச்சியாக சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    அந்த வகையில் சென்னையில் கடந்த 5-ந்தேதி அன்று தொடங்கிய வருமான வரி சோதனை மூன்று நாட்களாக நடைபெற்று வந்தது. இந்த சோதனை நேற்று இரவுடன் முடிவடைந்துள்ளது.

    அரசியல் பிரமுகர்கள், ஒப்பந்ததாரர்கள் ஆகியோர்களின் வீடுகளில் நடைபெற்ற இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளன. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக கட்டு கட்டாக கோடிக்கணக்கில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் பேரிலேயே வருமானவரித்துறையினர் இந்த சோதனையை நடத்தி இருந்தனர்.

    ஆனால் இந்த சோதனையின் போது பணம் ஏதும் கைப்பற்றப்பட்டுள்ளதா என்பது பற்றிய விவரங்களை இன்னும் வெளியிடவில்லை. இருப்பினும் சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இது தொடர்பாக கூடுதல் விவரங்களை வருமான வரித்துறையினர் விரைவில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • தமிழகம் முழுவதும் 40 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
    • அ.தி.மு.க. ஆட்சியில் ஈரோட்டில் பல்வேறு அரசு கட்டுமான திட்டங்களுக்கான டெண்டர்களை பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளன.

    ஈரோடு:

    பாராளுமன்ற தேர்தலில் பண பட்டுவாடாவை தடுக்கும் வகையில் வருமான வரித்துறை அதிகாரிகள் தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு பணி ஒப்பந்ததாரர்கள் வீடு மற்றும் அலுவலகங்கள், தனியார் கட்டுமான நிறுவன உரிமையாளர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

    அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் 40 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஈரோடு-பெருந்துறை சாலை பழையபாளையத்தில் சத்தியமூர்த்தி என்பவருக்கு சொந்தமான கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இவர் அ.தி.மு.க. ஆட்சியில் ஈரோட்டில் பல்வேறு அரசு கட்டுமான திட்டங்களுக்கான டெண்டர்களை பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளன.

    இந்த நிலையில் பழையபாளையம் கணபதி நகரில் உள்ள ஒப்பந்ததாரர் சத்தியமூர்த்தி வீடு மற்றும் அவரது கட்டுமான நிறுவன அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று திடீரென சோதனை நடத்தினர். துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எப். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இரவு வரை நடந்த இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

    இது குறித்த தகவலை கூற அதிகாரிகள் மறுத்து விட்டனர். இதனைத்தொடர்ந்து இன்று 2-வது நாளாக அவரது அலுவலகம் மற்றும் பவர் ஹவுஸ் பகுதியில் உள்ள அவரது உறவினர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனை முடிவில் தான் முழு தகவல் தெரிவிக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்து விட்டனர்.

    • விஜயநாராயணம் பண்ணை வீட்டில் இன்று காலை வரையிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பாளை பெருமாள் புரத்தில் உள்ள ஆர்.எஸ்.முருகனின் அலுவலகத்திலும், என்.ஜி.ஓ. காலனியில் உள்ள அவரது வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுப்பதற்காக பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வரும் இந்த சோதனையில் இதுவரை ரூ.160 கோடிக்கும் மேல் பணம் மற்றும் பரிசு பொருட்கள் பிடிபட்டுள்ளன.

    இந்த நிலையில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதற்காக அரசியல் கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் அரசு ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்டோரின் வீடுகளில் கோடிக்கணக்கில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

    இதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாகவே சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். சென்னையில் 4 நாட்களுக்கு முன்பு நடத்தப்பட்ட சோதனையில் ரூ.4 கோடி பணம் பிடிபட்டது.

    இந்த நிலையில் அரசியல் கட்சி பிரமுகர்கள், ஒப்பந்ததாரர்கள் ஆகியோருக்கு சொந்தமான 40 இடங்களை குறி வைத்து வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். நேற்று பிற்பகலில் தொடங்கிய இந்த சோதனை இரவு முழுவதும் நீடித்தது. இன்று 2-வது நாளாக சோதனை நீடிக்கிறது.

    சென்னையில் விருகம்பாக்கம், அடையாறு இந்திராநகர், திருவான்மியூர், அபிராமபுரம் உள்ளிட்ட 4 இடங்களில் வருமான வரித்துறை சோதனை தொடங்கியது. இதில் விருகம்பாக்கத்தில் மட்டும் சோதனை முடிவடைந்துள்ளது. அங்கு 3 கோடி ரூபாய் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டிருப்பதாக தகவல் பரவியது. ஆனால் அதனை வருமான வரித்துறை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

    அடையாறு இந்திரா நகரில் கட்டுமான நிறுவனம் ஒன்றில் நடத்தப்பட்டு வரும் சோதனை 2-வது நாளாக நீடிக்கிறது. திருவான்மியூரில் ராமச்சந்திரன் என்ற தொழில் அதிபரின் வீடு, அபிராமபுரத்தில் ஓய்வு பெற்ற உதவி செயற்பொறியாளர் தங்கவேலு ஆகியோரது வீடுகளிலும் வருமான வரித்துறை சோதனை நீடிக்கிறது.

    கோவையில் மாநகராட்சி மற்றும் நகராட்சி ஒப்பந்த பணிகளை மேற்கொண்டு வருபவர் அவினாசி ரவி. இவரது அலுவலகம் அவினாசி ரோடு லட்சுமி மில் சந்திப்பில் உள்ளது.

    நேற்று இவரது அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனையை 7 அதிகாரிகள் தொடங்கினர். இன்று 2-வது நாளாக அந்த அலுவலகத்தில் சோதனை நடத்தி வருகிறார்கள். அங்கிருந்து சில முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றி உள்ளனர். இதேபோல ராம்நகரில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்திலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு செஞ்சி சாலையில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் செந்தில் குமாரின் பிரபல நகைக்கடை உள்ளது. இந்த கடையிலும், வந்தவாசி சாலையில் உள்ள நகைக்கடையிலும் வருமான வரித்துறை ஆணையாளர் சுப்பிரமணி தலைமையில் 20 பேர் அடங்கிய குழுவினர் திடீர் சோதனை செய்தனர்.

    அப்போது வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக நகைகள் ஏதாவது மொத்தமாக ஆர்டர் செய்யப்பட்டு உள்ளதா? என தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

    தேனி பாராளுமன்ற தொகுதியில் அ.ம.மு.க. வேட்பாளராக டி.டி.வி. தினகரன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக சென்னை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் தேனியில் தங்கி பிரசார பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    பெரியகுளம் வடகரை பகுதியில் உள்ள ஒரு விடுதியில் அ.ம.மு.க. நிர்வாகிகள் 15க்கும் மேற்பட்டோர் தங்கி இருந்து, பெரியகுளம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதியில் தேர்தல் பிரசார பணிகளை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் விடுதியில் தங்கி இருந்த அ.ம.மு.க. பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பணம் வைத்திருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் 4 பேர் கொண்ட வருமானவரித்துறையினர் அவர்களது அறைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    அவர்கள் வைத்திருந்த செல்போன் மற்றும் லேப்டாப் ஆகியவற்றிலும் சோதனை நடத்தப்பட்டது. 4 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த சோதனையில் எந்த ஒரு ஆவணங்களோ, பணமோ கைப்பற்றப்படவில்லை.

    நெல்லை மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறையின் டெண்டர்களை எடுக்கும் அரசு ஒப்பந்ததாரர் ஆர்.எஸ்.முருகன் என்பவருக்கு சொந்தமான நாங்கு நேரி அருகே உள்ள விஜய நாராயணத்தில் அவரது பண்ணை வீட்டில் நேற்று மதியம் வருமான வரித்துறை அதிகாரிகள் 6 பேர் குழுவினர் சோதனையை தொடங்கினர்.

    தொடர்ந்து பாளை பெருமாள் புரத்தில் உள்ள ஆர்.எஸ்.முருகனின் அலுவலகத்திலும், என்.ஜி.ஓ. காலனியில் உள்ள அவரது வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

    விஜயநாராயணம் பண்ணை வீட்டில் இன்று காலை வரையிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த சோதனையானது சுமார் 15 மணி நேரத்திற்கும் மேலாக இன்று காலையும் தொடர்ந்து வருகிறது. சோதனையில் கிடைத்த சில ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    நேற்று முன்தினம் தி.மு.க. நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் அலுவலகத்தில் நடந்த சோதனையில் கிடைத்த ஆதாரத்தின் அடிப்படையில் தற்போது அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் சோதனை நடப்பதாக கூறப்படுகிறது.

    • சோதனையானது சுமார் 15 மணி நேரத்திற்கும் மேலாக இன்று காலையும் தொடர்ந்து வருகிறது.
    • சோதனையில் கிடைத்த சில ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நெல்லை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்யப்படுவதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் அரசியல் கட்சியினர் மூலம் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக அரசு ஒப்பந்ததாரர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டவர்கள் கட்டுக்கட்டாக பணம் பதுக்கி வைத்துள்ளதாகவும், அதனை அரசியல் கட்சியினருக்கு நன்கொடையாக வழங்க திட்டமிட்டிருப்பதாகவும் கிடைத்த தகவலின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் வருவமான வரித்துறையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நெல்லை மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறையின் டெண்டர்களை எடுக்கும் அரசு ஒப்பந்ததார் ஆர்.எஸ்.முருகன் என்பவருக்கு சொந்தமான நாங்குநேரி அருகே உள்ள விஜயநாராயணத்தில் அவரது பண்ணை வீட்டில் நேற்று மதியம் வருமானவரித்துறை அதிகாரிகள் 6 பேர் குழுவினர் சோதனையை தொடங்கினர்.

    தொடர்ந்து பாளை பெருமாள்புரத்தில் உள்ள ஆர்.எஸ்.முருகனின் அலுவலகத்திலும், என்.ஜி.ஓ. காலனியில் உள்ள அவரது வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

    இதில் என்.ஜி.ஓ. காலனி வீட்டில் சுமார் 2 மணி நேரம் மட்டுமே சோதனை நடத்தப்பட்ட நிலையில், விஜயநாராயணம் பண்ணை வீட்டில் இன்று காலை வரையிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த சோதனையானது சுமார் 15 மணி நேரத்திற்கும் மேலாக இன்று காலையும் தொடர்ந்து வருகிறது. சோதனையில் கிடைத்த சில ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பெருமாள்புரம் அலுவலகத்தில் நேற்று நள்ளிரவு 11 மணி வரையிலும் சோதனை நடத்தப்பட்ட நிலையில் அதன் பின்னர் வருமான வரித்துறையினர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். அதே நேரத்தில் அந்த அலுவலகத்தை வருமான வரித்துறையினர் தங்களது கட்டுப்பாட்டிலேயே வைத்துள்ளனர்.

    அங்கு அதிகாரி ஒருவர் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வேறு யாரும் அந்த அலுவலகத்திற்குள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    நேற்று முன்தினம் தி.மு.க. நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் அலுவலகத்தில் நடந்த சோதனையில் கிடைத்த ஆதாரத்தின் அடிப்படையில் தற்போது அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் சோதனை நடப்பதாக கூறப்படுகிறது.

    • நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் அலுவலகத்தில் நேற்று சோதனை நடத்தப்பட்டது.
    • நெல்லை மாவட்டத்தில் பறக்கும் படையினரும், வருமான வரித்துறை அதிகாரிகளும் அதிரடி சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பிரபல அரசு ஒப்பந்ததாரர் ஒருவரது வீட்டில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வள்ளியூர் அருகே உள்ள விஜயநாராயணம் பகுதியில் ஒப்பந்ததாரரின் பண்ணை வீட்டில் இந்த சோதனை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்வதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய நெல்லை மாவட்டத்தில் பறக்கும் படையினரும், வருமான வரித்துறை அதிகாரிகளும் அதிரடி சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.

    நேற்று நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் இன்று பிரதான கட்சி ஒன்றின் பிரமுகராக இருந்து வரும் அரசு ஒப்பந்ததாரர் ஒருவரது வீட்டில் நடத்தப்படும் சோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • தொழில் அதிபர்களின் வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
    • கொரட்டூரில் மட்டும ரூ.2½ கோடி பணம் பிடிபட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுவதையொட்டி பணப்பட்டு வாடாவை தடுக்க பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையே வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக சென்னையில் சில இடங்களில் கட்டுக்கட்டாக பணம் மற்றும் பரிசு பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுபற்றி அவர்கள் வருமான வரித்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதனைத் தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னையில் 5 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். ஓட்டேரியில் சொகுசு வசதிகளுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் தொழில் அதிபர் ஒருவரின் வீடு, புரசைவாக்கம் கொண்டித்தோப்பு, கொரட்டூர் பகுதிகளில் உள்ள தொழில் அதிபர்களின் வீடுகள் என 5 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.

    நேற்று காலையில் தொடங்கிய வருமான வரி சோதனை இரவு வரை நீடித்தது.

    இந்த சோதனையின்போது தொழில் அதிபர்களின் வீடுகளில் ரகசிய அறைகளில் பணம் மற்றும் பரிசு பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளனவா? என்பது பற்றி வருமான வரித்துறை அதிகாரிகள் அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்தனர்.

    இதில் தொழில் அதிபர்களின் வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    கொரட்டூரில் மட்டும ரூ.2½ கோடி பணம் பிடிபட்டுள்ளது. வேறு ஒரு இடத்தில் 1½ கோடி சிக்கியது. இந்த பணத்தை எண்ணி எடுத்துச் சென்றுள்ள வருமான வரித்துறை அதிகாரிகள் தொழில் அதிபர்களிடம் அதற்கு உரிய கணக்கு கேட்டுள்ளனர்.

    இந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணம் என்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறும்போது, தேர்தல் நேரத்தில் பணப்பட்டுவாடாவை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்களை கொடுப்பதற்காக தொழில் அதிபர்களின் வீடுகளில் பணம் பதுக்கி வைத்திருக்கலாம் என்கிற சந்தேகத்தின் பேரில் நடத்தப்பட்ட சோதனைக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக பல்வேறு இடங்களை ரகசியமாக கண்காணித்து வருகிறோம் என்று தெரிவித்தனர்.

    தென்காசி, திருப்பூர், செய்யாறு உள்ளிட்ட இடங்களிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தென்காசி மற்றும் திருப்பூரில் தி.மு.க. பிரமுகர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. செய்யாற்றில் துணிக்கடைகள் மற்றும் பரிசு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. அங்கு பரிசு பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்பது பற்றி ஆய்வு செய்யப்பட்டது.

    இதேபோன்ற சோதனைகளை அடுத்தடுத்த நாட்களிலும் தொடர வருமான வரித்துறை அதிகரிகள் முடிவு செய்துள்ளனர்.

    ×