செய்திகள்
டெல்லி: கடும் பனிமூட்டத்தால் இன்றும் ரெயில் போக்குவரத்து பாதிப்பு
டெல்லியில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக இன்றும் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி:
டெல்லி, அரியானா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. மேலும், காற்று மாசுபாடு காரணமாகவும் வாகனங்கள் போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளது. எனவே, பெரும்பாலான மக்கள் ரெயில்களில் பயணம் செய்வதையே முன்னிலைப்படுத்தி வருகின்றனர்.
தலைநகர் டெல்லியில் இன்று காலை முதல் பனிமூட்டம் அதிகரித்து காணப்பட்டது. தனக்கு முன்னால் செல்பவர்கள் கூட தெரியாத நிலை உருவாகியுள்ளது.
புதுடெல்லி ரெயில் நிலையத்திலும் பனியின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இதன் காரணமாக ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், டெல்லியில் நிலவும் பனிமூட்டம் காரணமாக வெளியூர் செல்லும் ரெயில்களில் சுமார் 30 ரெயில்கள் தாமதமாக புறப்பட்டு செல்லும். மேலும், 4 ரெயில்களின் புறப்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டு உள்ளது. ஒரு ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.