செய்திகள்

ஆந்திராவில் கிருஷ்ணா நதியில் படகு கவிழ்ந்து விபத்து: 13 பேர் பலி

Published On 2017-11-12 14:21 GMT   |   Update On 2017-11-12 14:21 GMT
ஆந்திராவில் சுற்றுலா சென்ற படகு கிருஷ்ணா நதியில் கவிழ்ந்து விழுந்த விபத்தில் பெண்கள் உள்பட 13 பேர் பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விஜயவாடா:

ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தின் விஜயாவாடா அருகிலுள்ள பவானி தீவில் இருந்து பவித்ர சங்கமம் என்ற இடத்துக்கு படகு மூலம் சிலர் இன்று சுற்றுலா சென்றனர். அந்த படகில் சுமார் 38க்கு மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

இப்ராகிம் பட்டணம் என்ற இடத்தின் அருகே கிருஷ்ணா நதியில் செல்லும்போது திடீரென படகு ஆட்டம் கண்டது. இதனால் படகில் இருந்தவர்கள் கூச்சலிட்டு அலறினர். அப்போது படகு கிருஷ்ணா நதியில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.



இதைக்கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கும், மீட்பு படையினருக்கும் தகவல் கொடுத்தனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். படகுகள் மூலம் ஆற்றில் மூழ்கியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

ஆற்றில் மூழ்கிய பெண்கள் உள்பட 13 பேரின் உடல்களை மீட்பு படையினர் மீட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு படையினர் அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்த ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, தேசிய பேரிடர் மீட்பு படையினரை ஈடுபடுத்தி விரைந்து மீட்பு பணியில் ஈடுபடவேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
Tags:    

Similar News