செய்திகள்
பீகார்: பெகுசாராய் அருகே கங்கை ஆற்றில் புனித நீராடும்போது ஏற்பட்ட நெரிசலில் 3 பேர் பலி
பீகார் மாநிலத்தின் பெகுசாராய் மாவட்டத்தில் உள்ள கங்கை நதியில் புனித நீராடும்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்தனர்.
பாட்னா:
இந்தியாவின் வடமாநிலங்களில் இன்று கார்த்திகை பூர்ணிமா(பவுர்ணமி) தினம் கொண்டாடப்படுகிறது. இது இந்து , சீக்கிய மற்றும் ஜெயின் மதத்தினரால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த விழாவையொட்டி பீகார் மாநிலத்தின் பெகுசாராய் மாவட்டத்தில் உள்ள சிமாரியா என்னும் புனித தளத்தில் கங்கை நதியில் புனித நீராடுவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் இன்று கூடினர். அவர்கள் புனித நீராடுவதற்காக கங்கை நதியில் இறங்கியபோது அதிக கூட்டத்தின் காரணமாக நெரிசல் ஏற்பட்டது.
இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் இந்த சம்பவத்தில் காயமடைந்தனர். இந்த கூட்ட நெரிசல் வதந்தியின் காரணமாக ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்ச ரூபாய் நிதியுதவியை அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.