செய்திகள்

விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன்: இமாச்சல பிரதேச மக்களுக்கு காங்கிரஸ் வாக்குறுதி

Published On 2017-11-01 11:26 GMT   |   Update On 2017-11-01 11:26 GMT
இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு வட்டியில்லாமல் கடன் வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளது.
சிம்லா:

இமாச்சல பிரதேசத்தில் வரும் 9-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்னர். ஆட்சியைத் தக்க வைக்க தீவிர களப்பணியாற்றி வரும் காங்கிரஸ், இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

முதலமைச்சர் வீரபத்ரசிங், அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளரும் மாநில பொறுப்பாளருமான சுஷில் குமார் ஷிண்டே ஆகியோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். அதில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

மாநிலத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும். 90 சதவீத மானியத்துடன் விதைகள், உரங்கள், வேளாண் உபகரணங்கள், ஆலங்கட்டியில் இருந்து பயிர்களை பாதுகாக்கும் வலைகள் வழங்கப்படும். அத்துடன் ஒரு லட்சம் ரூபாய் வரை பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.

அரசுத் துறைகளில் 1.50 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். 50 ஆயிரம் கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக லேப்டாப்கள் வழங்கப்படும்.

தொழிலாளர்களின் தினக்கூலியானது ரூ.210-ல் இருந்துரூ.310 ஆக உயர்த்த கட்சி முடிவு செய்துள்ளது. மேலும், பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைக்கவும் முடிவு செய்துள்ளது.

ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் உயர்த்தப்படும். அரசு ஊழியர்களுக்கு 4-வது, 9-வது மற்றும் 14-வது வருடத்தில் கூடுதல் சம்பள உயர்வு வழங்கப்படும்.
Tags:    

Similar News