ராகுல்காந்தி, தலித் பெண்ணை திருமணம் செய்யவேண்டும்: மத்திய மந்திரி வலியுறுத்தல்
மும்பை:
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கிறார். 47 வயதான அவரிடம் சமீபத்தில் திருமணம் எப்போது? என்று ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் வென்ற விஜேந்தர் சிங் கேட்டார்.
இதற்கு சிரித்தபடியே பதில் அளித்த ராகுல் காந்தி “அது எப்போது நடக்க வேண்டுமோ? அப்போது நடக்கும். நான் விதியை நம்புகிறவன்” என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் ராகுல் காந்தி தலித் பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று மத்திய மந்திரியும், குடியரசு கட்சி தலைவருமான ராம்தாஸ் அத்வாலே வலியுறுத்தி உள்ளார்.
மராட்டிய மாநிலம் அகோலாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் இதை தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ராகுல் காந்தி நாளுக்கு நாள் முதிர்ச்சி பெற்று வருகிறார். அவரை இனி சிறு குழந்தை என்று சொல்ல இயலாது. அவர் தலித் வீடுகளுக்கு செல்கிறார். அங்கு உணவு சாப்பிடுகிறார். அவர் இன்னும் ஒருபடி மேல் சென்று மகாத்மா காந்தியின் கனவை நிறைவேற்ற வேண்டும்.
சாதிகள் ஒழிய கலப்பு திருமணம் அவசியம் என்று மகாத்மா காந்தி வலியுறுத்தினார். அதை ராகுல் காந்தி பின்பற்ற வேண்டும். அவரை திருமணம் செய்ய பல பெண்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனால் அவர் தலித் பெண்ணை திருமணம் செய்ய வேண்டும்.
இவ்வாறு மத்திய மந்திரி ராம்நாத் அத்வாலே தெரிவித்துள்ளார்.