செய்திகள்

உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க. தலைவர் சுட்டுக்கொலை

Published On 2017-10-22 11:17 GMT   |   Update On 2017-10-22 11:17 GMT
உத்தர பிரதேசம் மாநிலத்தின் லக்மிபூர் கேரி மாவட்டத்தில் பா.ஜ.க. உள்ளூர் தலைவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோ:

உத்தர பிரதேச மாநிலம் காஜிபூரை சேர்ந்தவர் ராஜேஷ் மிஸ்ரா என்ற ஆர்.எஸ்.எஸ். தொண்டர் நேற்று காலை மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று மாலை உ.பி. பா.ஜ.க. மாநில தலைவர் மகேந்திரநாத் பாண்டே ராஜேஷ் மிஸ்ராவின் வீட்டிற்கு சென்று இரங்கல் தெரிவித்தார்.


ராஜேஷ் மிஸ்ரா


இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தின் லக்மிபூர் கேரி மாவட்டத்தைச் சேர்ந்த உள்ளூர் பா.ஜ.க. தலைவரான பல்ராம் ஸ்ரீவஸ்டவா என்பவர் நேற்றிரவு அவர் வீட்டின் நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கொலையாளியை தேடி வருகின்றனர்.


ராஜேஷ் மிஸ்ராவின் பிரேதத்தை எடுத்து செல்லும் காட்சி  

இந்த கொலை வழக்கு தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஏழு பேரை கைது செய்து விசாரித்து வருவதாக போலீசார் கூறியுள்ளனர். ஒரே நாளில் இரண்டு பா.ஜனதா பிரமுகர்கள் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News