செய்திகள்
கேரளா: ஆம்புலன்ஸ் வேனுக்கு வழிவிடாமல் சென்ற வாகன ஓட்டுனர் கைது
கேரளா மாநிலம் பெரும்பாவூரில் அவசரமாக சென்ற ஆம்புலன்ஸ் வேனுக்கு வழிவிடாமல் கார் ஓட்டிச் சென்றவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:
பெரும்பாவூரில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஒரு பச்சிளங் குழந்தையை அப்பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் இருந்து கலமாசேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வேனில் கொண்டு சென்று கொண்டிருந்தனர். அப்போது, சாலையில் முன்னே சென்ற கார் ஒன்று ஆம்புலன்சின் சையரன் சத்தத்தையும், ஹார்ன் சத்தத்தையும் சற்றும் பொருட்படுத்தாமல் அலட்சியமாக இடைமறித்துச் சென்றது.
நீண்ட நேரம் இதேபோல் தொந்தரவு ஏற்பட்டதால், மருத்துவ உதவியாளர் அதனை வீடியோ எடுத்தார். கார் ஓட்டுநர் வழிவிடாமல் கார் ஓட்டியதால், ஆம்புலன்ஸ் மருத்துவமனையை சென்றடைய கூடுதலாக 15 நிமிடங்கள் எடுத்துக்கொண்டது.
இதனையடுத்து, அந்த வீடியோ ஆதாரத்துடன் பெரும்பாவூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் ஆம்புலன்சுக்கு வழிவிடாது வாகனம் ஓட்டிய நிர்மல் ஜோஸ் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரது லைசென்சை ரத்து செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.