செய்திகள்

இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை அக். 16-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Published On 2017-10-11 11:57 GMT   |   Update On 2017-10-11 11:58 GMT
இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணையை அக்டோபர் 16-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
புதுடெல்லி:

அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டதால் 45 ஆண்டுகளாக அக்கட்சியின் அதிகாரபூர்வ சின்னமாக இருந்த இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. சின்னத்தை பெறுவதற்காக அ.தி.மு.க. அணிகள் சார்பில் பிரமாண பத்திரங்கள் உள்பட பல்வேறு ஆவணங்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக மதுரை உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் ஆணையம் தாமதப்படுத்தாமல் இதுபோன்ற பிரச்சனைகளுக்கு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே அக்டோபர் 31-ம் தேதிக்குள் இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பதை முடிவெடுத்து தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு 
வழக்கை முடித்து வைத்தனர்.

இதற்கிடையே, டி.டி.வி. தினகரன் தரப்பினர் தங்களுக்கு மேலும் கால அவகாசம் வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணையை அக்டோபர் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்து தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இரட்டை இலை சின்னம் தொடர்பான இறுதி விசாரணை அக்டோபர் 13-ம் தேதி நடைபெறும் என ஏற்கனவே அறிவித்திருந்தோம். ஆனால், தினகரன் தரப்பினரின் கோரிக்கையை ஏற்று அக்டோபர் 16-ம் தேதி விசாரணை நடைபெறும் என தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News