செய்திகள்

13,140 வங்கி கணக்குகள் மூலம் ரூ. 4574 கோடி கறுப்பு பணம் டெபாசிட் செய்த நிறுவனங்கள்

Published On 2017-10-06 11:52 GMT   |   Update On 2017-10-06 11:52 GMT
பணமதிப்பிழப்பு நடவடிக்கையை தொடர்ந்து பல்வேறு நிறுவனங்கள் 13,140 வங்கி கணக்குகள் மூலம் ரூ. 4574 கோடி கறுப்பு பணத்தை டெபாசிட் செய்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி:

பிரதமர் மோடி கடந்த 2016 நவம்பர் 8-ம் தேதி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். மக்கள் தங்களிடம் இருந்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள், தபால் நிலையங்களில் மாற்றினர். இதற்கிடையே 2000, 500 ரூபாய் நோட்டுகளும் புழக்கத்திற்கு வரதொடங்கின. அந்த கால கட்டங்களில் பல்வேறு நிறுவனங்கள் தங்களிடம் இருந்த கறுப்பு பணங்களை வங்கிகள் மூலம் மாற்றியதாக கூறப்பட்டது.

இந்நிலையில், 13 வங்கிகள் பணமதிப்பு இழப்பு நடவடிக்கைக்கு பிந்தைய பரிவர்த்தனை பற்றிய தகவலை மத்திய அரசிடம் அளித்துள்ளது. அதன்படி 5,800 சந்தேகத்திற்குரிய நிறுவனங்கள் 13,140 வங்கி கணக்குகள் மூலம் ரூ. 4574 கோடி கறுப்பு பணத்தை டெபாசிட் செய்துள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த கணக்குகளில் இருந்து 4,552 கோடி ரூபாய் திரும்பப் பெறபட்டு உள்ளது. அதன்பிறகு இந்த வங்கிக் கணக்குகளின் செயல்பாடு தடை செய்யப்பட்டது எனவும் கூறப்பட்டுள்ளது.

வங்கிகளால் சமர்ப்பிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சில நிறுவனங்கள் 100 க்கும் அதிகமான கணக்குகளை பராமறித்து வந்தது தெரியவந்துள்ளது. இதில் ஒரு நிறுவனத்தின் பேயரில் அதிகபட்சமாக 2,134 கணக்குகள் உள்ளன. பெரும்பாலான நிறுவனங்கள் சுமார் 300 முதல் 900 கணக்குகள் வரை வைத்துள்ளனர்.

இந்த நிறுவனங்களின் கணக்குகளில் நவம்பர் 8, 2016 அன்று சுமார் 22.05 கோடி ரூபாய் இருப்பு இருந்துள்ளது. ஆனால் நவம்பர் 9, 2016ல் இருந்து அந்த கணக்குகள் முடக்கப்படும் வரை ரூ.4573.87 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளன. பின்னர் அந்த கணக்குகளில் இருந்து ரூ.4552 கோடி திரும்ப எடுக்கப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News