செய்திகள்
பெட்ரோல், டீசலுக்கான அடிப்படை கலால் வரி லிட்டருக்கு ரூ.2 வீதம் குறைப்பு
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான அடிப்படை கலால் வரியை லிட்டருக்கு இரண்டு ரூபாய் வீதம் குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:
பெட்ரோல், டீசல் மீதான விலையை மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றியமைத்து வந்தன. கடந்த ஜூன் மாதம் 16-ந்தேதி முதல் அன்றாட அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நடைமுறைக்கு பின்பு இதுவரை பெட்ரோலும், டீசலும் லிட்டருக்கு சுமார் பத்து ரூபாய் வரை அதிகரித்து இருக்கிறது. இதையடுத்து, பெட்ரோல், டீசல் மீது அன்றாடம் விலையை நிர்ணயிப்பது சுமையாக உள்ளது, எனவே இதை கைவிட வேண்டும் என்ற கோரிக்கை நுகர்வோர் தரப்பில் நாடு முழுவதும் எழுந்துள்ளது.
இந்நிலையில், சர்வதேச சந்தையில் விலை உயர்ந்ததால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சுமையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான அடிப்படை கலால் வரியை லிட்டருக்கு இரண்டு ரூபாய் வீதம் குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விலைகுறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் எனவும், அரசின் இந்த நடவடிக்கையால் ஆண்டிற்கு ரூ. 26 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.