செய்திகள்

எடியூரப்பா மீதான விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது உயர்நீதிமன்றம்

Published On 2017-09-22 10:45 GMT   |   Update On 2017-09-22 10:45 GMT
கர்நாடக மாநில பா.ஜ.க தலைவரும் முன்னாள் முதல்வருமான எடியூரப்பா மீதான முறைகேடு வழக்கை விசாரிப்பதற்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
பெங்களூரு:

கர்நாடகாவில் எடியூரப்பா முதலமைச்சராக பதவி வகித்தபோது, பெங்களூர் சிவராம் காரந்த் லே அவுட்டில் 257 ஏக்கர் நிலத்தை மாநகர வளர்ச்சி கழகத்துக்கு ஒப்படைத்ததில் முறைகேடு செய்ததாக ஊழல் தடுப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஜன சாமான்ய வேதிகே என்ற சமூக அமைப்பின் உறுப்பினர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், எடியூரப்பா மீது இரண்டு வழக்குகள் (எப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சமீபத்தில் மாநில அமைச்சர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் எதிர்க்கட்சி தலைவர்கள் குறிவைக்கப்படுவதாக எடியூரப்பா குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில், தன் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி எடியூரப்பா, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனு இன்று நீதிபதி அரவிந்த் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, புகார் மற்றும் விசாரணை அமைப்பின் முதற்கட்ட விசாரணையில் எடியூரப்பா மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதுமான முகாந்திரம் இல்லை என்பதால், ஊழல் தடுப்பு போலீசாரின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
Tags:    

Similar News