செய்திகள்

ஜம்மு-காஷ்மீர்: அர்னியா, சம்பா பகுதிகளில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்

Published On 2017-09-21 14:48 GMT   |   Update On 2017-09-21 14:49 GMT
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் அர்னியா மற்றும் சம்பா பகுதிகளில் பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர் என இந்திய பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எல்லைக் கட்டுபாட்டு கோட்டை தாண்டி பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த வாரத்தில் பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலில் எல்லை பாதுகாப்பு படைவீரர் ஒருவரும் மற்றும் மாநில போலீசாரும் பலியாகினர்.

இதற்கிடையே, இந்தியா மற்றும் பாகிஸ்தான் படையினர் எல்லையில் துப்பாக்கி சூடு நடத்துவதை நிறுத்த வேண்டும் என ஜம்மு-காஷ்மீர் முதல் மந்திரி மெகபூபா முப்தி நேற்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஜம்மு மாவட்டத்தின் அர்னியா பகுதியில் பாகிஸ்தான் படையினர் இன்று காலை அத்துமீறி நுழைந்து திடீரென தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அப்பகுதியில் உள்ள வீடுகளின் மேல் கையெறி குண்டுகள் வீசப்பட்டன. இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்த இந்திய பாதுகாப்பு படையினர், பாகிஸ்தான் படையினருக்கு பதிலடி கொடுத்தனர். இந்த தாக்குதலில் எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை.

இன்று மாலை மீண்டும் அதேபகுதியில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு இந்திய வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்தனர்.

இதேபோன்று காஷ்மீர் மாநிலத்தில் சம்பா மாவட்டத்திலும் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல்களின்போது ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் கிடைக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
Tags:    

Similar News